/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' பணிகள் ஆய்வு 4 மாதங்களில் நிறைவு செய்ய இலக்கு
/
ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' பணிகள் ஆய்வு 4 மாதங்களில் நிறைவு செய்ய இலக்கு
ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' பணிகள் ஆய்வு 4 மாதங்களில் நிறைவு செய்ய இலக்கு
ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' பணிகள் ஆய்வு 4 மாதங்களில் நிறைவு செய்ய இலக்கு
ADDED : பிப் 07, 2024 12:41 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரித் பாரத்' திட்டத்தில் நடைபெறும் பணிகளை, பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கினார்.
மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில்வே சந்திப்பு அல்லது ஸ்டேஷன்களை தொலைநோக்கு பார்வையில் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதில், பயணிகளுக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், குடிநீர் வழங்கல், குளிரூட்டப்பட்ட பயணியர் காத்திருப்பு அறை, ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன.
மாற்றுத்திறன் பயணியருக்கு வசதி ஏற்படுத்துதல், வாகன காப்பிடம் மற்றும் தேவையான கட்டடங்கள் கட்டப்படுகிறது. 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 1,275 ரயில்வே ஸ்டேஷன்கள் நவீனமயமாக்கி மேம்படுத்தப்படுகிறது.
அதில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில் தலா, 15 சந்திப்புகள் அடையாளம் காணப்பட்டு, பணிகள் நடக்கிறது. பாலக்காடு கோட்டத்துக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் பணிகள் மேற்கொள்ள கடந்தாண்டு ஏப்., மாதம் மின் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
அதில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மறு சீரமைப்பு செய்தல், 7.75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. பழைய ரயில்வே ஸ்டேஷன் முகப்பு மற்றும் மேற்கூரை பிரிக்கப்பட்டது. பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.
இப்பணிகளை, பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் அருண்குமார் சதுர்வேதி ஆய்வு செய்தார். உதவி கோட்ட ரயில்வே மேலாளர் ஜெயகிருஷ்ணன் மற்றும் ரயில்வே இன்ஜினியர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க உரிய அறிவுரைகளை வழங்கினார்.
பாலக்காடு கோட்ட ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது:
பாலக்காடு, எட்டிமடை, மதுக்கரை, போத்தனுார் வழியாக சிறப்பு ரயிலில் வந்த கோட்ட மேலாளர், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனை பார்வையிட்டார். தொடர்ந்து, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் தரத்தை மேம்படுத்தவும், பயணியருக்கு சிறந்த சேவை வழங்குவதற்காகவும் மறுவடிவமைப்பு செய்யும் பணிகளை பார்வையிட்டார்.
கழிப்பிடம் மற்றும் பயணியர் வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக, புதிய வாகன நிறுத்துமிடம் கட்டப்படுகிறது. இப்பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தற்போது, 40 சதவீத பணிகள் முடிந்துள்ளன. நான்கு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

