/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவு உயர செய்ய வேண்டியதென்ன? வழிமுறைகளை பட்டியலிடுகின்றனர் தொழில் துறையினர்
/
ஓட்டுப்பதிவு உயர செய்ய வேண்டியதென்ன? வழிமுறைகளை பட்டியலிடுகின்றனர் தொழில் துறையினர்
ஓட்டுப்பதிவு உயர செய்ய வேண்டியதென்ன? வழிமுறைகளை பட்டியலிடுகின்றனர் தொழில் துறையினர்
ஓட்டுப்பதிவு உயர செய்ய வேண்டியதென்ன? வழிமுறைகளை பட்டியலிடுகின்றனர் தொழில் துறையினர்
ADDED : ஏப் 23, 2024 11:42 PM

கோவை : நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் ஏழு லட்சம் பேர் ஓட்டுப்போடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அனைவரும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளையே சுட்டிக்காட்டுகின்றனர். இந்த குளறுபடிகளை களைந்தால், 100 சதவீத ஓட்டுப்பதிவு கூட சாத்தியம்தான் என்கின்றனர், நம் கோவை மக்கள்.
சி.டி.ஆர்.ஐ. (அகில இந்திய ஜவுளி கூட்டமைப்பு பருத்தி அபிவிருத்திக்கழகம்) தலைவர் ராஜ்குமார்: நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்கு, நல்ல ஆட்சிவர வேண்டும் என்று முதலில் மக்கள் விரும்ப வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு, இந்த ஓட்டு முக்கியம் என்ற சிந்தனை மனதில் வரவேண்டும்.
அரசு எத்தனையோ திட்டங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. அதே போல் தேர்தல் காலத்தில் மட்டுமல்லாமல், சாதாரண நாட்களிலும் ஓட்டு செலுத்துவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன்: வாக்காளர்களின் முதல் கடமையே ஓட்டளிப்பது தான். ஒவ்வொ ருவரும் அந்த பொறுப்பை உணர்ந்து, செயல்பட வேண்டும்.
ஓட்டுப்பதிவு நாளை, வாரத்துவக்கத்திலோ இறுதியிலோ வைப்பதால், பலரும் தொடர் விடுமுறைக்கு வெளியூர் செல்கின்றனர். அதனால் வாரத்தின் நடுப்பகுதியில் செவ்வாய், புதனில் நடத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருப்பது, கள்ளஓட்டு போட்டதாக புகார் போன்ற வற்றால் மக்களுக்கு நம்பிக்கையில்லாத நிலை ஏற்படுகிறது. இதை போக்கும்வகையில் ஓட்டுப்பதிவு இருக்க வேண்டும்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஓட்டு செலுத்துவதை எளிமைப்படுத்துவதோடு, வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.
நாட்டுமக்களுக்கு ஆதாரை எப்படி எளிமைப்படுத்திக்கொடுத்தனரோ, அதே போல் எளிதில் மாற்றமுடியாத வகையில், ஓட்டு செலுத்துவதையும் நவீன தொழில் நுட்பத்தின் வாயிலாக எளிமைப்படுத்த வேண்டும்.
இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டல தலைவர் நந்தினி ரங்கசாமி:
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, மகளிருக்கான ஓட்டுச்சாவடிகளையும் அதிகரிப்பது அவசியம்.
வாக்காளர் பட்டியலில், பெயர் விடுபட்டிருப்பதற்கான காரணங்களை தெரிவிப்பதோடு, அவர்களுக்கான ஓட்டுக்களை செலுத்த, சட்டரீதியாக வாய்ப்பு வழங்க வேண்டும்.
கோடை வெயிலின் உச்சகட்டத்தில், ஓட்டு போடுவதில் உள்ள சிரமத்தை போக்க, உரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இரவு 7:00 மணி வரை, வாக்களிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியலை, டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.
ஓட்டுக்கள் செலுத்துவதை தொழில்நுட்ப ரீதியாக எளிமைப்படுத்த வேண்டும்.
வாக்காளர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தினால், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு சாத்தியமே.
வனிதா மோகன்

