/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாய் யானை உடல் நிலையில் முன்னேற்றம்; சுற்றி சுற்றி வந்து குட்டி யானை பாசம்
/
தாய் யானை உடல் நிலையில் முன்னேற்றம்; சுற்றி சுற்றி வந்து குட்டி யானை பாசம்
தாய் யானை உடல் நிலையில் முன்னேற்றம்; சுற்றி சுற்றி வந்து குட்டி யானை பாசம்
தாய் யானை உடல் நிலையில் முன்னேற்றம்; சுற்றி சுற்றி வந்து குட்டி யானை பாசம்
ADDED : ஜூன் 01, 2024 12:38 AM

வடவள்ளி;மருதமலை வனப்பகுதியில், உடல் நலம் குன்றியிருந்த பெண் யானைக்கு தொடர் சிகிச்சை அளிப்பதால், உடல் நலம் முன்னேறி வருகிறது.
கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை வனப்பகுதியில், யானை பிளிரும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, சுமார், 40 வயதுள்ள பெண் யானை உடல் நலம் குன்றி கிடந்துள்ளது.
அதன், அருகில் 3 மாத குட்டி யானை, தாயை விட்டு பிரியாமல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து, வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அதன்பின், வனகால்நடை டாக்டர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், யானையை பரிசோதனை செய்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று, பெண் யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. வனத்துறையினர், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன், படுத்துக் கிடந்த பெண் யானையை எழுந்து நிற்க வைத்தனர்.
இதனையடுத்து, வனத்துறையினர் பெண் யானைக்கு, புற்களை உணவாக அளித்தனர். பெண் யானை எழுந்து நின்ற போது, அதன் குட்டி, தாயை சுற்றி, சுற்றி வந்து பாசத்தை வெளிப்படுத்தியது. பெண் யானையும், தனது குட்டியை அரவணைத்தது. இதனை கண்ட அனைவரும் நெகிழ்ந்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'பெண் யானைக்கு, இரண்டு நாட்களில், 60 பாட்டில் குளூக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. தேவையான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன. நீர் சத்திற்காக, ஆசனவாய் மூலம் 50 லிட்டர் தூய்மையான நீரை செலுத்தியுள்ளோம். யானைக்கு, கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் அல்லது அதன் வாயில் இருந்து ஒரு பல் விழுந்து உள்ளதால், அதில் ஏதேனும் சிக்கியதால், உணவு உண்ண முடியாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம். தற்போது உணவு வழங்கியுள்ளோம்.
இதனால், யானையின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. யானை தானாக அங்கிருந்து செல்லும் வரை, தொடர்ந்து சிகிச்சை அளித்து, அதன் பின்னும் கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

