/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்லடம் 4 பேர் கொலை வழக்கு ;4 பேருக்கு ஆயுள் தண்டனை
/
பல்லடம் 4 பேர் கொலை வழக்கு ;4 பேருக்கு ஆயுள் தண்டனை
பல்லடம் 4 பேர் கொலை வழக்கு ;4 பேருக்கு ஆயுள் தண்டனை
பல்லடம் 4 பேர் கொலை வழக்கு ;4 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஏப் 16, 2024 01:06 AM

திருப்பூர்;பல்லடத்தில், நான்கு பேர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 45. இவரது தாய் புஷ்பவதி, 67, அத்தை ரத்தினம்மாள், 58, பெரியப்பா மகன் செந்தில்குமார், 47 ஆகியோர் கடந்தாண்டு செப்., 3ம் தேதி இரவு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர்.
மோகன்ராஜின் தோட்டத்தில், நெல்லையை சேர்ந்த ராஜ்குமார், 27 என்பவர் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக்கேட்டதை தொடர்ந்து, ஆத்திரத்தில் இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியது.
இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளைக் கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டங்களை மேற்கொண்டனர்.
5 பேர் கைது
இந்நிலையில், கொலையில் தொடர்புடைய நெல்லையை சேர்ந்த ராஜ்குமார், 27, இவரது சகோதரர் வெங்கடேஷ், 29, இவர்களது தந்தை ஐயப்பன், 52, தேனியை சேர்ந்த சோனை முத்தையா, 30, திருச்சியை சேர்ந்த செல்லமுத்து, 24 என, ஐந்து பேரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கில் கைது செய்த போது, தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால், ராஜ்குமாரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.
கைதான ஐந்து பேரும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
கொலை வழக்கில், போலீஸ் தரப்பில் விசாரணை மேற்கொண்டு, சாட்சிகள் விசாரணை முடித்து, ஐந்து பேர் மீது, 800 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் துவங்கியது. கடந்த மாதம் விசாரணை துவங்கியது; ஒரு வாரத்தில் மொத்தம், 51 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
ஏழு மாதத்தில் தீர்ப்பு
வழக்கில் குற்றவாளிகளான ராஜ்குமார், சோனை முத்தையா, செல்லமுத்து, ஐயப்பன் ஆகியோருக்கு, நான்கு கொலை சம்பவங்களுக்கு தனித்தனியே 4 ஆயுள் தண்டனைகள் விதித்தும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நேற்று நீதிபதி சொர்ணம் நடராஜன் உத்தரவிட்டார். வெங்கடேஷூக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தமிழக அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கொலை நடந்து முடிந்து, ஏழு மாதத்துக்குள் விரைந்து விசாரணை முடிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது; வழக்கு தொடர்பாக மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜரானார்.

