/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறன்மிகு கோவை...திட்டங்கள் தேவை...! பழைய ரயில் சேவைகள்...புதிய கோட்டம்...கோவையின் வளர்ச்சிக்கு இது கட்டாயம்!
/
திறன்மிகு கோவை...திட்டங்கள் தேவை...! பழைய ரயில் சேவைகள்...புதிய கோட்டம்...கோவையின் வளர்ச்சிக்கு இது கட்டாயம்!
திறன்மிகு கோவை...திட்டங்கள் தேவை...! பழைய ரயில் சேவைகள்...புதிய கோட்டம்...கோவையின் வளர்ச்சிக்கு இது கட்டாயம்!
திறன்மிகு கோவை...திட்டங்கள் தேவை...! பழைய ரயில் சேவைகள்...புதிய கோட்டம்...கோவையின் வளர்ச்சிக்கு இது கட்டாயம்!
ADDED : ஏப் 05, 2024 12:22 AM

கோவையின் தொழில் வளர்ச்சிக்கு விமான நிலைய விரிவாக்கம் மிக அவசியம் என்று வலியுறுத்தப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, சர்வதேச விமானங்கள் இங்கு வந்தால் தான், பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு பாதம் பதிக்க வாய்ப்புண்டு. அதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்; பொருளாதாரம் செழிக்கும்.
அது மட்டுமின்றி, கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், தொழில், சுற்றுலா, மருத்துவம் தொடர்பாக, பல்வேறு நாடுகளிலிருந்தும் பலர் வந்து செல்வதற்கும் சர்வதேச விமான சேவைகள் அதிகரிப்பது அத்தியாவசியத் தேவையாகவுள்ளது. ஆனால் எளிய, நடுத்தட்டு மக்கள், தொழிலாளர்கள் என வெகுஜன மக்களின் விருப்பக் கோரிக்கைகள், ரயில்வே சார்ந்தவை தான்.
கொங்கு மண்டலத்தின் தலைநகராகவுள்ள கோவைக்குக் கிடைக்கும் ரயில்வே வசதிகள், புதிய ரயில்கள் அனைத்தும் மேற்கு மாவட்டங்கள் அனைத்துக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்பதால் தான், கோவையை அடிப்படையாக வைத்து ரயில்வே கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. அதில் கோவை சந்திப்பை மறு சீரமைப்புத் திட்டத்தில் மேம்படுத்துவது என்பது தனிக் கோரிக்கை.
அதைத் தவிர்த்து, ரயில்வே கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், ரயில் சேவைகளை கூடுதலாகப் பெறவும் கோவையை தலைமையிடமாகக் கொண்டு, புதிய ரயில்வே கோட்டம் துவக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கத் துவங்கியுள்ளது. இதற்குக் காரணமும் இருக்கிறது.
சுதந்திரத்துக்கு முன்பே, ரயில்வே கோட்டத் தலைமையிடமாக கோவையின் போத்தனுார் தான் இருந்துள்ளது.
போத்தனுார்னா...ரயில்வே ஏரியா!
இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தில் சென்னை சென்ட்ரலுக்கும் முந்தைய ரயில்வே ஸ்டேஷன் என்ற பெருமை, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கே உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில், முதல் முதலாக 1861 ல், தமிழகத்தில் ரயில் தடம் அமைக்கப்பட்ட போது உருவான முதல் ஸ்டேஷன், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் தான். அதற்குப் பின்பு, 1871 ல் தான் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டது.
அப்போதிலிருந்தே கோட்டத் தலைமையிடமாகவும் போத்தனுார் தான் இருந்துள்ளது. சுதந்திரத்துக்கு முன்பே, உருவாக்கப்பட்ட கோட்டம் என்பதால், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனைச் சுற்றிலும் ஏராளமான இடங்கள், ரயில்வே துறைக்காக கையகப்படுத்தப்பட்டன. அங்கு ரயில்வே பணியாளர்கள் குடியிப்பு, மருத்துவமனை, கல்யாண மண்டபம் போன்றவை உருவாக்கப்பட்டன.
போத்தனுார் என்றாலே, ரயில்வே ஏரியா என்று சொல்லுமளவுக்கு, அந்தப் பகுதியே, ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்பு, 1953 ல் தான், கோட்டத்தலைமையிடம் கேரள மாநிம் ஒலவக்கோட்டுக்கு மாற்றப்பட்டது; அதுவே பின்பு பாலக்காடு கோட்டமானது. பல ஆண்டுகளாக பாலக்காடு கோட்டத்தின் கீழ், கொங்கு மண்டலப்பகுதிகள் இருந்தன.
கோவை, திருப்பூர். ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் தரும் வருமானம் முழுவதும், கேரள ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்தப் பயன்படுத்தப்பட்டது; தமிழகப் பகுதிகள் அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்டன. இதனால் கொங்கு மண்டலத்துக்கென புதிய ரயில்வே கோட்டம் வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்றது.
உதயமானது புதிய கோட்டம்!
பாலக்காடுக்கு மிக அருகில் இருப்பதால், கோவையில் ரயில்வே கோட்டம் அமைக்க முடியாது என்று விதிமுறையைக் காரணம் காட்டியதால், சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, புதிய கோட்டம் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது; போராட்டம் வெடித்தது; அதன் பலனாக 2007 நவ.,1 ல் சேலம் கோட்டம் உதயமானது.
புதிய கோட்டம் துவங்கி, 18 ஆண்டுகள் கடந்தும், கோவைக்கு பெரிதாக எந்த பலனும் கிடைக்கவில்லை. கோவையின் ரயில்வே தேவைகளுக்கும், தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளுக்கும் யானைப்பசிக்கு சோளப்பொரி என்பதைப் போலவே, சின்னச்சின்ன கட்டமைப்புப் பணிகள் செய்யப்படுகின்றன; தேவைக்கும் குறைவாகவே புதிய ரயில் இயக்கப்படுகின்றன.
இந்த ஆதங்கத்தின் அடிப்படையில் தான், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு, புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. தொழில் மற்றும் வர்த்தக சபையின் கோவை கிளை முன்னெடுத்த இந்தக் கோரிக்கைக்கு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 180 அமைப்புகள் ஆதரவு அளித்துக் கடிதம் கொடுத்தன.
அது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வசம் ஒப்படைக்கப்பட்டது; கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனும் இதை நேரில் வலியுறுத்தினார்.
ஏற்கனவே கோட்டத் தலைமையிடமாக இருந்த போத்தனுாரில் தேவையான இடவசதிகள் இருப்பதால், கோட்டம் துவங்குவதற்கு நிலமெடுப்பு தேவைப்படாது; கட்டமைப்புகளை மிக விரைவாக ஏற்படுத்துவதும் சாத்தியமே.
கோட்டம் அமைந்தால் மட்டுமே, கோவை சந்திப்பு, போத்தனுார் சந்திப்பு, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லுார் ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த முடியும்.
போத்தனுாரை இரண்டாவது முனையமாக மாற்ற முடியும். கூடுதல் 'பிட் லைன்' மற்றும் பராமரிப்பு மையங்களை ஏற்படுத்தி, கூடுதல் ரயில் சேவைகளை ஏற்படுத்த முடியும். அதற்கு கோவை ரயில்வே கோட்டம் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
இந்த கோரிக்கையையும், கோவை எம்.பி., மட்டுமின்றி, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் நீலகிரி எம்.பி.,க்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்; மத்திய அரசிடம் மக்கள் எதிர்பார்க்கும் எத்தனையோ விஷயங்களில் ரயில் சேவைகளும், ரயில்வே கட்டமைப்பு தேவைகளுமே முன்னிலை வகிப்பதால், இந்த கோரிக்கைகளை வென்றெடுப்பதே இந்த எம்.பி.,க்களுக்கான முதல் கடமையாக இருக்க வேண்டும்.

