/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்களில் தண்ணீர் பாட்டில் வைக்கலாமே! தாகம் தீர்க்க பயணியர் எதிர்பார்ப்பு
/
பஸ்களில் தண்ணீர் பாட்டில் வைக்கலாமே! தாகம் தீர்க்க பயணியர் எதிர்பார்ப்பு
பஸ்களில் தண்ணீர் பாட்டில் வைக்கலாமே! தாகம் தீர்க்க பயணியர் எதிர்பார்ப்பு
பஸ்களில் தண்ணீர் பாட்டில் வைக்கலாமே! தாகம் தீர்க்க பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : மார் 22, 2024 10:34 PM
பொள்ளாச்சி:கோடை முடியும் வரை, அரசு பஸ்களில் உரிய தொகை பெற்று, கண்டக்டர் வாயிலாக தண்ணீர் பாட்டில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.
பொள்ளாச்சியில், அரசு போக்குவரத்து கழகத்தின் மூன்று பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து, கோவை, தேனி, சேலம், மதுரை, திருப்பூர், ஈரோடு, சென்னை என, தொலைதுார ஊர்களுக்கு அதிகப்படியான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தொலை துாரம் பயணிக்கும் மக்கள், அதற்கான பஸ்சை தேர்வு செய்து பயணிக்கின்றனர். அப்போது, பஸ் எந்த ஊரில் குறிப்பிட்ட நேரம் நிறுத்தப்படுகிறதோ, அங்கு உணவு உட்கொள்ளவும், தண்ணீர் பாட்டில் வாங்கவும் முற்படுகின்றனர்.
தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், பஸ்சில் பயணிக்கும் சிலர், தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, தொலைதுார பஸ்களில், பயணியரின் நலன் கருதி, உரிய தொகையைப் பெற்று, கண்டக்டர் வாயிலாக தண்ணீர் பாட்டில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சியில் இருந்து, அரசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. தினமும், ஆயிரக்கணக்கான மக்கள், பஸ்களில் பயணிக்கின்றனர். அவற்றில் தொலைதுாரம் செல்லும் பஸ்கள், ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் தேர்வு செய்த இடங்களில் சற்று நேரம் நிறுத்தப்படுகிறது.
அப்போது, பயணியர் தங்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தின்பண்டங்களை வாங்கிக் கொள்கின்றனர். அதற்கிடையே வெயிலின் தாக்கத்தால் தாகம் ஏற்பட்டால் பரிதவிக்கின்றனர். கோடை முடியும் வரை, பஸ்களில் உரிய தொகை பெற்று கண்டக்டர் வாயிலாக தண்ணீர் பாட்டில் வழங்க வேண்டும்.
அதற்கேற்ப பஸ்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் தண்ணீர் பாட்டில்களை இருப்பு வைத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். இதனால், அரசு பஸ்களில் பயணிக்கும் பயணியர், குடிநீர் தேவைப்பட்டாலும் கண்டக்டரிடம் இருந்து பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதனை, கூடுதல் பணியாக மேற்கொள்ள போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

