/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடைகள் ஒதுக்கீடு விவகாரம் மெரினாவில் நீதிபதிகள் ஆய்வு: கேள்விகளால் திணறிய அதிகாரிகள்
/
கடைகள் ஒதுக்கீடு விவகாரம் மெரினாவில் நீதிபதிகள் ஆய்வு: கேள்விகளால் திணறிய அதிகாரிகள்
கடைகள் ஒதுக்கீடு விவகாரம் மெரினாவில் நீதிபதிகள் ஆய்வு: கேள்விகளால் திணறிய அதிகாரிகள்
கடைகள் ஒதுக்கீடு விவகாரம் மெரினாவில் நீதிபதிகள் ஆய்வு: கேள்விகளால் திணறிய அதிகாரிகள்
ADDED : டிச 23, 2025 05:13 AM

சென்னை: மெரினா கடற்கரையில், கடைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர், நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மெரினாவில் தங்களுக்கு கடை ஒதுக்கக்கோரியும், அதற்கான மனுக்களை பரிசீலிக்கும்படியும், மாநகராட்சிக்கு உத்தரவிடக்கோரி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தேவி உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'சென்னை மாநகராட்சி கமிஷனர் தரப்பில், கடைகள் அமைப்பது தொடர்பான வரைபடத்துடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதை ஆய்வு செய்த நீதிபதிகள், 'கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பற்றிய தகவல் தெளிவாக இல்லை' எனக் கூறியதோடு, 'மெரினா கடற்கரையை நேரில் ஆய்வு செய்ய உள்ளோம்' என அறிவித்தனர்.
அதன்படி, மெரினா உழைப்பாளர் சிலை முதல் பட்டினப்பாக்கம் வரையிலான பகுதியில், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர், நேற்று காலை 9:00 மணிக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
நீதிபதிகளிடம், வரைபடங்களை காட்டிய மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், 'கடற்கரையில் எத்தனை கடைகள் அமைய உள்ளன' உள்ளிட்ட விபரங்களை எடுத்துரைத்தார்.
அதற்கு, 'ஒவ்வொரு கடைகளுக்கும் எவ்வளவு இடைவேளை விடப்படுகிறது; ஒரு வரிசையில், 50 கடைகள் என, நான்கு வரிசையில், 200 கடைகள் தான் அமைக்க வேண்டும். அப்போதுதான் பெருமளவில் இடம் ஒதுக்கப்பட வேண்டியிருக்காது' என, மாநகராட்சி கமிஷனரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மணற்பரப்பில் மழைநீர் தேங்காதபடி, அவ்விடத்தில் கூடுதலாக மணல்போட்டு மேடாக்குமாறு நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.
புற்களை அகற்றுங்கள் உழைப்பாளர் சிலை பின்புறம், 15க்கும் மேற்பட்ட மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இதை பார்த்த நீதிபதிகள், 'அங்கு வளர்ந்துள்ள புற்களை அகற்றினால் மாடுகள் மேய விடுவது தடுக்கப்படும்.
'அவ்விடத்தில், சட்ட விரோத சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில், உயர் கோபுர மின்விளக்குகளை கூடுதலாக அமைக்க வேண்டும். இது பொது மக்கள் அச்சமின்றி, அப்பகுதிக்கு செல்லவும் வசதியாக இருக்கும்' என்றனர்.
உயிரிழப்பு குறைவு கடற்கரையில் உயிரிழப்புகள் குறித்து நீதிபதிகள் கேட்டபோது, ''கடந்தாண்டு 24 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். இந்தாண்டு நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்,'' என,போலீஸ் கமிஷனர் அருண் கூறினார்.
பின், காந்தி சிலை பின்புறம் ஆய்வு மேற்கொண்டபோது, 'அங்கு மணல் பரப்பில் உபயோகமின்றி கிடந்த ராட்டினம், கடைகளை ஏன் இன்னும் அப்புறப்படுத்தாமல் உள்ளீர்கள்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உடனே, ''இன்றே அகற்றிவிடுகிறோம்,'' என. மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உறுதி அளித்தார்.

