
போன் பறித்த 2 சிறுவர்கள் கைது
ஆலந்துார்: ஆலந்துார், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம், 30; இவர், பட்ரோடு பகுதியில் உள்ள பேக்கரியில் பணி புரிந்தார். கடந்த 5ம் தேதி இரவு பணி முடித்து, கிழக்கு செட்டி தெரு வழியாக நடந்து சென்றார்.அப்போது, பைக்கில் வந்த சிறுவர்கள் இருவர் சண்முகத்தின் மொபைல் போனை பறித்து சென்றனர். இது குறித்து விசாரித்த பரங்கிமலை போலீசார், திருட்டில் ஈடுபட்ட பொன்னேரி மற்றும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரை கைது செய்தனர்.
வீடு புகுந்து திருடியவர் பிடிபட்டார்
ஏழுகிணறு: கொண்டித்தோப்பு, டெலிகிராம் அப்பாய் தெருவைச் சேர்ந்தவர் சேகர், 22. கடந்த 7ம் தேதி வீட்டில் 'சார்ஜிங்' போடப்பட்டிருந்த இவரது மொபைல் போன் திருடு போனது. அதேபோல நரேஷ் குமார், 42, என்பவரது கடையில் இருந்த மொபைல் போன் மற்றும் 2,000 ரூபாய் திருடு போனது. ஏழுகிணறு போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 22, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
23 கிலோ கஞ்சா பறிமுதல்
செங்குன்றம்: செங்குன்றம், மொண்டியம்மன் நகரில், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த வடமாநில வாலிபரிடம் கஞ்சா சிக்கியது. விசாரணையில், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்தா, 25, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் ஒடிஷாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாகனங்களின் கண்ணாடி உடைப்பு
புளியந்தோப்பு: யானைகவுனியைச் சேர்ந்தவர் அஜித், 27; இறைச்சி கடை ஊழியர். இவர், நேற்று முன்தினம் மது போதையில், புளியந்தோப்பு, ராஜாதோட்டம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, டாடா ஏஸ் சரக்கு வாகனம் உட்பட மூன்று வாகனங்களின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கி உள்ளார். இது குறித்து விசாரித்த பேசின்பாலம் போலீசார் அஜித்தை நேற்று கைது செய்தனர்.

