/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் திருவேற்காடு மக்கள் அவதி
/
3 மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் திருவேற்காடு மக்கள் அவதி
3 மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் திருவேற்காடு மக்கள் அவதி
3 மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் திருவேற்காடு மக்கள் அவதி
ADDED : ஜூன் 13, 2024 12:41 AM

திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில், கே.என்.வி நகர் நகர் உள்ளது. திருவேற்காடு கோலடி பிரதான சாலை முதல் தேரடி சாலை வரை, 2 கி.மீ., துாரத்திற்கு, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத் துறையால் வடிகால் கட்டப்பட்டது.
கால்வாய் சுற்றுவட்டாரத்தில் கோலடி பிரதான சாலை, கே.என்.வி.நகர், பாரதி நகர் பிரதான சாலை, மற்றும் பாரதி நகர் விரிவாக்கம் பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட வடிகாலில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கால்வாயில் குப்பை கழிவு மற்றும் மண்ணால் அடைப்பு ஏற்பட்டு நிரம்பி வழிகிறது. இதனால், கோலடி முதல் தேரடி வரை, சாலையில் கழிவு நீர் வழிந்து ஓடுகிறது.
இப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், கழிவு நீரில் நடந்து சென்று வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களாக வடிகாலில் இருந்து கழிவு நீர் வெளியேறி, பாரதி நகர் மற்றும் பாரதி நகர் விரிவாக்கம் பகுதி சாலை மற்றும் வீடுகளில் வழிந்து ஓடுகிறது.
இதனால், இரவு வேளைகளில் கொசு தொல்லையால் பகுதிவாசிகள் துாக்கம் தொலைத்தனர். பாரதி நகர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர், தினமும் கழிவு நீரில் நடந்து செல்லும் அவலம்தொடர்கிறது.
சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளும் பிரச்னைக்கு தீர்வு காணாமல் மவுனமாக உள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட பழைய வடிகாலை அகற்றி, மழைக்கு முன் புது வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகள், பிரச்னையின் தீவிரத்தை எடுத்துக் கூறி, நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத் துறைக்கு அழுத்தம் தர வேண்டும். இல்லையெனில் மழைக்காலத்தில் வீடுகளில் கழிவு நீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்படுவர்.
- பகுதிவாசிகள், திருவேற்காடு.

