/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு மணி நேரம் முடங்கிய மெட்ரோ சேவையால் அவதி
/
ஒரு மணி நேரம் முடங்கிய மெட்ரோ சேவையால் அவதி
ADDED : ஆக 19, 2024 12:10 AM
சென்னை: சென்னையில், விமான நிலையம் முதல் விம்கோ நகர், சென்ட்ரல் - பரங்கிமலை வரையிலான இரு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரத்துக்கு, மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
காலை மற்றும் மாலை நேரத்தில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், விம்கோ நகர் - சென்னை விமான நிலையம் இடையேயான வழித்தடம் முழுதும், நேற்று மதியம் 12:50 மணிக்கு, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால், விம்கோ நகர் - விமான நிலையம்; சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை தடத்தில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன.
இடையில், 15 முதல் 20 நிமிடங்களுக்கு, ஒரு மெட்ரோ ரயில் மட்டும் தாமதமாக இயக்கப்பட்டது.
மேலும், பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் - விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்கள் தற்காலிமாக நிறுத்தப்பட்டன.
தகவலறிந்த மெட்ரோ ரயில் பொறியாளர்கள், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யும் வேலையில் இறங்கினர்.
பிரச்னை முழுதும் சரிசெய்யப்பட்டு மதியம் 2:10 மணிக்கு, வழக்கம் போல் மெட்ரோ ரயில் இயங்க துவங்கியது. திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் சேவை 1 மணி நேரம் பாதிக்கப்பட்டதால், பயணியர் அவதியடைந்தனர்.
பயணியர் கூறியதாவது:
மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. அதேபோல், நிறுத்தங்கள் குறித்த அறிவிப்பிலும் குளறுபடி இருக்கிறது.
கிண்டி நிறுத்தத்திற்கு வந்தபோது, விமான நிலையம் வந்துள்ளதாக அறிவிப்பு தரப்படுகிறது. இதனால், புதிய பயணியர் குழப்பம் அடைகின்றனர். அது சார்ந்த பிரச்னையையும், மெட்ரோ நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

