ADDED : ஏப் 30, 2024 12:45 AM

சோழிங்கநல்லுார், இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கி சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 192 முதல் 200 வரை உள்ள வார்டுகளில், 2,000த்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
குடிநீர், கழிவுநீர், எரிவாயு குழாய் பதிப்பு, மின்கேபிள் பதிப்பு போன்ற பணிகளால், சாலைகள் மோசமாக உள்ளன. மேலும், சீரமைத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள், மழையால் சேதமடைந்த சாலைகள் என, 114 கி.மீ., துாரத்தில், 632 சாலைகள் புதுப்பிக்க வேண்டி இருந்தது.
இதற்காக, மாநில நிதித்திட்டம், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு நிதி உதவி திட்டம், நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் சிங்கார சென்னை ஆகிய திட்டங்களின் கீழ், 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், பழைய சாலையை சுரண்டி எடுத்து, தார் மற்றும் சிமென்ட் சாலை போட, எட்டு ஒப்பந்த நிறுவனங்கள் நியமிக்கப்பட்டன.
சாலை அமைப்பதற்காக, பல தெருக்களில் பழைய சாலைகள் சுரண்டப்பட்ட நிலையில், தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன.
ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட மற்றும் துவங்காமல் இருந்த தெருக்களில், சாலை புதுப்பிக்கும் பணி, தற்போது துவங்கப்பட்டு உள்ளது. இரு மாதங்களில், அனைத்து தெருக்களிலும் தரமான சாலை அமைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

