/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாய், தந்தை கண்முன் மகன் வெட்டி கொலை நள்ளிரவில் வீடு புகுந்து 4 பேர் கும்பல் அராஜகம் இறந்தவரின் நண்பருக்கும் சரமாரி வெட்டு
/
தாய், தந்தை கண்முன் மகன் வெட்டி கொலை நள்ளிரவில் வீடு புகுந்து 4 பேர் கும்பல் அராஜகம் இறந்தவரின் நண்பருக்கும் சரமாரி வெட்டு
தாய், தந்தை கண்முன் மகன் வெட்டி கொலை நள்ளிரவில் வீடு புகுந்து 4 பேர் கும்பல் அராஜகம் இறந்தவரின் நண்பருக்கும் சரமாரி வெட்டு
தாய், தந்தை கண்முன் மகன் வெட்டி கொலை நள்ளிரவில் வீடு புகுந்து 4 பேர் கும்பல் அராஜகம் இறந்தவரின் நண்பருக்கும் சரமாரி வெட்டு
ADDED : ஜூன் 13, 2024 11:40 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகன் சின்னா என்ற உதயநிதி, 20; காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் பி.எஸ்சி., கணிதம் மூன்றாம் ஆண்டு மாணவர்.
நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, இவரது வீட்டிற்கு வந்த நான்கு பேர் கும்பல், கதவை தட்டியுள்ளது. உதயநிதியின் தாய் சரிதா கதவை திறந்துள்ளார்.
கத்தியுடன் காத்திருந்த கும்பல், சரிதாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, வீட்டிற்குள் புகுந்தது. தந்தை கோதண்டராமன், தாய் சரிதா கண் முன்னே, துாங்கிக் கொண்டிருந்த உதயநிதியை சரமாரியாக வெட்டி, அங்கிருந்து தப்பி ஓடியது. படுகாயமடைந்த உதயநிதி, ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பாலுசெட்டிச்சத்திரம் போலீசார், உதயநிதியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உதயநிதியை கொலை செய்வதற்கு சற்று நேரத்திற்கு முன், இதே கும்பல், படுநெல்லி கிராமத்தில் வசித்து வந்த உதயநிதியின் நண்பன் கிரி, 20, என்பவரையும் வெட்டியுள்ளது.
இச்சம்பவத்தின்போது, அருகில் பொதுமக்கள் கூடியதால், அங்கிருந்து தப்பியோடிய கும்பல், நேராக கோவிந்தவாடி அகரம் கிராமத்திற்கு வந்து, இரண்டாவது சம்பவமாக உதயநிதியை கொலை செய்துள்ளது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த கிரி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிரி போலீசாரிடம் கூறுகையில், ''முன்விரோதம் காரணமாக பிரேம்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் கத்தியால் வெட்டினர்,'' என்றார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட உதயநிதியும், அவரது அண்ணன் பாரிவேந்தனும், அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரை, கடந்த மார்ச் மாதம் நடந்த கோவில் திருவிழாவில் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து, பிரேம்குமாரின் தந்தை ராஜாராமன், போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு பதிந்த போலீசார், பாரிவேந்தனை கைது செய்தனர்; உதயநிதி தலைமறைவானார்.
இந்நிலையில், வீட்டிற்கு வந்து உதயநிதி தங்கியது, நால்வர் கும்பலுக்கு தெரியவந்ததால், முன்பகை காரணமாக, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த உதயநிதியை, நான்கு பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக, கோவிந்தவாடி அகரம் புதிய காலனியை சேர்ந்த பிரேம்குமார், 22, அவரது நண்பர்கள் சஞ்சய், 20, மணிகண்டன், 20, மூர்த்தி, 20, ஆகிய நான்கு பேரையும், போலீசார் தேடி வருகின்றனர்.

