/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொத்தனார் கொலையில் தொழிலாளர்கள் கைது யார் 'பெரியவர்' என்ற போட்டியால் விபரீதம்
/
கொத்தனார் கொலையில் தொழிலாளர்கள் கைது யார் 'பெரியவர்' என்ற போட்டியால் விபரீதம்
கொத்தனார் கொலையில் தொழிலாளர்கள் கைது யார் 'பெரியவர்' என்ற போட்டியால் விபரீதம்
கொத்தனார் கொலையில் தொழிலாளர்கள் கைது யார் 'பெரியவர்' என்ற போட்டியால் விபரீதம்
ADDED : ஏப் 02, 2024 12:29 AM

துரைப்பாக்கம், சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்தவர் முத்து, 38; கொத்தனார். இவருக்கு திருமணமாகவில்லை. பெருங்குடி, காமராஜர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு, கடந்த ஒரு மாதமாக தங்கியிருந்து பணிபுரிந்தார்.
இவருடன், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, 45, கோவையைச் சேர்ந்த சந்துரு, 22, மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் பணி புரிந்தனர். இந்த நிலையில், கடந்த 24ம் தேதி முதல் முத்து, ராஜா மற்றும் சந்துருவை காணவில்லை.
இது குறித்து, கட்டுமான பொறியாளர் ரமேஷ்பாபு, துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், ராஜா மற்றும் முத்து, கோவையில் இருப்பது தெரிந்தது.
நேற்று முன்தினம், இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில், அதிர்ச்சி தகவல் வெளியானது. மதுபோதையில் இருவரும் முத்துவை கொலை செய்து குழி தோண்டி புதைத்தது தெரிந்தது. இதையடுத்து, புதைத்த இடத்தை இருவரும் நேற்று அடையாளம் காட்டினர்.
சோழிங்கநல்லுார் தாசில்தார் சிவகுமார் முன்னிலையில், முத்துவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அரசு மருத்துவர்களான சதீஷ், மஞ்சு ஆகியோர் பிரேத பரிசோதனை செய்ய இருந்தனர்.
தலைகீழாக போட்டு புதைத்ததால், முகம் சிதைந்து இருந்தது. மேலும், முத்துவின் உறவினர்களும் கூச்சல்போட்டதால், பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை.
இதனால், போலீசார் உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கடந்த, 24ம் தேதி, முத்து, ராஜா, சந்துரு ஆகியோர், சம்பவ இடத்தின் அருகில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, பணித்தளத்தில் யார் பெரியவர் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இதில், மூன்று பேருக்கும் தகராறு ஏற்பட்டது. முத்து, அவர்களை ஒருமையில் பேசி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜா, சந்துரு ஆகியோர், கத்தியால் முத்துவை குத்தி கொலை செய்து, அருகில் 2 அடி அகலம், 3 அடி ஆழத்தில் பள்ளம் எடுத்து, புதைத்து விட்டு தப்பி சென்றனர்.
கொலைக்கு வேறு எதாவது காரணம் இருக்குமா என, இருவரிடமும் தீவிர விசாரணை செய்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

