/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூரனை வதம் செய்த முருகன் எலப்பாக்கத்தில் கோலாகலம்
/
சூரனை வதம் செய்த முருகன் எலப்பாக்கத்தில் கோலாகலம்
ADDED : நவ 08, 2024 01:32 AM

அச்சிறுபாக்கம்:மேல்மருவத்துார் அருகே எலப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த சின்மய விநாயகர், பாலமுருகன் திருக்கோவில் உள்ளது. திருமண தடை, கல்வி, தொழில் வளம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வரங்களை தரும் தலமாக உள்ளது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் பால் காவடி பெருவிழா மற்றும் மாதந்தோறும் கிருத்திகை, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி நடந்து வருகிறது.
இரண்டாம் ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த 2ம் தேதி காப்பு அணிதல் நிகழ்வுடன் துவங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்து வந்தன. நேற்று மாலை 4:30 மணிக்கு மேல், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
கோவிலில் இருந்து வேல் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து, ஆட்டு கிடா, சேவல், சிங்கமுகம் உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் தோன்றிய சூரனை, வேல் கொண்டு பாலமுருகன் வதம் செய்தார்.
இந்நிகழ்வில், சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு, 'அரோகரா... அரோகரா' கோஷத்துடன் முருகனை வணங்கினர்.
இரவு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், பாலமுருகன் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவு பக்தி நாடகம் நடைபெற்றது.
இன்று, வள்ளி, தெய்வானை உடனுறை பாலமுருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

