/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் - வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்
/
வண்டலுார் - வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்
வண்டலுார் - வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்
வண்டலுார் - வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்
ADDED : டிச 16, 2025 05:56 AM

வண்டலுார்: வண்டலுார் ரயில் நிலையத்திலிருந்து வாலாஜாபாத் செல்ல, ஜி.எஸ்.டி., சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் வழி தவறி, பெருங்களத்துார் வந்து திரும்பிச் சென்று சிரமப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ரயில் நிலையம் அருகில், வாலாஜாபாத் சாலை துவங்குகிறது.
இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லலாம்.
வண்டலுார் வழியாக ரயில்கள் அடிக்கடி செல்வதால், தண்டவாளத்தைக் கடந்து வாலாஜாபாத் சாலைக்குச் செல்ல, வாகனங்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அடிக்கடி நடந்தன.
இதற்கு தீர்வாக, ஜி.எஸ்.டி., சாலையுடன், வாலாஜாபாத் சாலையை இணைக்கும்படி, 27 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த 2012ல் பணிகள் முடிந்து, இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தது.
பின், தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் வாகன ஓட்டிகள் அறியும்படி, இந்த மேம்பாலத்தின் முகப்பு பகுதியில், வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது.
ஆனால், செங்கல்பட்டு, கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் அறியும்படி, வழிகாட்டி பலகை அமைக்கப்படவில்லை.
இதனால், புதிதாக இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், வாலாஜாபாத் சாலைக்கு செல்வதற்கு பதிலாக, பெருங்களத்துார் வரை வந்து விடுகின்றனர்.
பின், குழப்பத்தை உணர்ந்து, 'யு - டர்ன்' எடுத்து, மீண்டும் வண்டலுார் நோக்கி வந்து, மேம்பாலத்தில் பயணித்து, வாலாஜாபாத் செல்லும் நிலை தொடர்கிறது. இதனால் நேரம் மற்றும் எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. எனவே, இந்த குழப்பத்தை தீர்க்க, வாகன ஓட்டிகளுக்குத் தெரியும் வகையில் வழிகாட்டி பலகை வைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

