/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் ரூ.4.70 கோடி மதிப்பில் நிறைவு மே 15க்குள் கூடுவாஞ்சோிக்கு 'சப்ளை'
/
பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் ரூ.4.70 கோடி மதிப்பில் நிறைவு மே 15க்குள் கூடுவாஞ்சோிக்கு 'சப்ளை'
பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் ரூ.4.70 கோடி மதிப்பில் நிறைவு மே 15க்குள் கூடுவாஞ்சோிக்கு 'சப்ளை'
பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் ரூ.4.70 கோடி மதிப்பில் நிறைவு மே 15க்குள் கூடுவாஞ்சோிக்கு 'சப்ளை'
ADDED : ஏப் 22, 2024 05:27 AM

செங்கல்பட்டு : மாமண்டூர் பாலாறு கூட்டுக் குடிநீர் திட்டப்பணியில், நீர் உறிஞ்சு கிணறு அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. கிணற்று பகுதியில் இருந்து தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிக்கு குழாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணியை, ஒரு மாதத்தில் முடித்து, மே 15ம் தேதிக்குள் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு வினியோகிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு, தமிழ்நாடு குடிநீர் வாரியம் வாயிலாக, மாமண்டூர் பாலாற்றில் மூன்று கிணறுகள் அமைத்து, குழாய் இணைப்பு வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு பெய்த மழையால், பாலாற்றில் வெள்ளம் அதிகமாக சென்றபோது, குடிநீர் குழாய்கள், மின்கேபிள் ஒயர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதனால், நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் தடைப்பட்டது.
இதைத் தொடர்ந்து, புதிதாக குழாய்கள் அமைத்து, கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும் என, தொடர்ந்து அரசு மற்றும் கலெக்டர் ஆகியோரிடம், நகராட்சி நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அதன்பின், கூடுதல் குடிநீர் வழங்கவும், பிரதான குழாய்களை சீரமைக்கவும், 4.70 கோடி ரூபாய் நிதி கேட்டு, தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, மாநில நிதி ஆணையத்தின் ஊக்க நிதியிலிருந்து 4 கோடி ரூபாய், மறைமலை நகர் நகராட்சியின் பொது நிதியில் 70 லட்சம் ரூபாய் என, மொத்தம் 4.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிக்கு 'டெண்டர்' விடப்பட்டு, செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்றில் நீர் உறிஞ்சு கிணறு, குழாய்கள் அமைக்கும் பணி, கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, நகரசபை தலைவர்கள் கார்த்திக், சண்முகம் மற்றும் அதிகாரிகள் துவக்கி வைத்தனர்.
தற்போது, நீர் உறிஞ்சு கிணறு அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. கிணற்றில் இருந்து, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணிகளை, தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள், சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின், குழாய் அமைத்தல், மின்கேபிள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து, மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு, பாலாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், மாமண்டூர் பாலாற்றில் நீர் உறிஞ்சு கிணறு அமைக்கும் பணி நிறைவு பெற்றது. குழாய், மின்கேபிள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து துவக்கி, மே மாதம் 15ம் தேதிக்குள், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள்,
செங்கல்பட்டு மாவட்டம்.

