/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மீண்டும் மல்யுத்த போராட்டம் * சாக் சி, பஜ்ரங் புனியா மிரட்டல்
/
மீண்டும் மல்யுத்த போராட்டம் * சாக் சி, பஜ்ரங் புனியா மிரட்டல்
மீண்டும் மல்யுத்த போராட்டம் * சாக் சி, பஜ்ரங் புனியா மிரட்டல்
மீண்டும் மல்யுத்த போராட்டம் * சாக் சி, பஜ்ரங் புனியா மிரட்டல்
ADDED : பிப் 14, 2024 10:47 PM

புதுடில்லி: ''இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக மீண்டும் போராட தயங்க மாட்டோம்,'' என சாக் சி மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பா.ஜ., எம்.பி., பிரிஜ்பூஷண் ஷரண் சிங் மீது, பாலியல் புகார் கூறப்பட்டது. இவரை கைது செய்ய வேண்டும் என இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், சாக் சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராடினர்.
மத்திய அரசு தலையிட, போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. தவிர, நிர்ணயித்த காலத்திற்குள் தேர்தல் நடத்தாததால், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, கடந்த 2023, ஆக. 25ல் சர்வதேச அமைப்பு (யு.டபிள்யு.டபிள்யு.,) தடை விதித்தது. இதனிடையே புதிய தலைவராக, பிரிஜ்பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் தங்களது அர்ஜுனா, பத்ம விருதுகளை, டில்லி கடமை பாதியில் விட்டுச் சென்றனர்.
இவ்விஷயத்தில் தலையிட்ட மத்திய அரசு, மல்யுத்த கூட்டமைப்பை கடந்த டிச. 27ல் சஸ்பெண்ட் செய்தது. மல்யுத்தத்தை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட தற்காலிக குழு அமைக்கப்பட்டது. தற்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான தடையை யு.டபிள்யு.டபிள்யு., நீக்கியது.
இதுகுறித்து சாக் சி மாலிக் வெளியிட்ட செய்தி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான தடையை நீக்குவதற்கு தவறான வழிகளை சஞ்சய் சிங் பயன்படுத்தியுள்ளார். எங்களது போராட்டம் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளது. மல்யுத்தத்தில் இருந்து நான் ஓய்வு பெற்றாலும், பிரிஜ்பூஷண், அவரது ஆதரவாளர்கள் வீராங்கனைகளுக்கு தொல்லை கொடுப்பதை, மல்யுத்த சங்கத்தை நிர்வகிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டேன். மத்திய அரசு எங்களுக்கு உறுதி தர வேண்டும். இல்லை எனில் மீண்டும் போராட்டத்தை துவக்குவோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தடை நீக்கம்
கடந்த 2023, ஆக. 25ல் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதை பிப். 13ல் யு.டபிள்யு.டபிள்யு., நீக்கியது. இருப்பினும் 'வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக் சி மாலிக் என மூன்று பேர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என, இந்திய கூட்டமைப்பு எழுத்து பூர்வமான உறுதி தரவேண்டும்,' என யு.டபிள்யு.டபிள்யு., நிபந்தனை விதித்துள்ளது.
பிரிஜ்பூஷண் மகன் தலைவர்
பஜ்ரங் புனியா கூறுகையில்,'' பிரிஜ்பூஷண் குடும்பத்தினர், உறவினர் யாரும் மல்யுத்தத்தில் தலையிட மாட்டர் என மத்திய அரசு உறுதி தருகிறது. ஆனால், சில நாளுக்கு முன் இவரது மகன், உ.பி., சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.
எங்களுக்கு அங்கீகாரம்
புதியதாக தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த அமைப்பை, மத்திய அரசு 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. ஆனால் யு.டபிள்யு.டபிள்யு., தடையை நீக்கியுள்ளது. இதுகுறித்து புதிய தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில்,'' சர்வதேச அமைப்பு எங்களை அங்கீகரித்துள்ளது. தற்காலிக குழுவுக்கு இங்கு வேலையில்லை,'' என்றார்.

