/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'வேகம்'...பிரட் லீ தீராத மோகம்: ஆஸ்திரேலியாவின் புது கவுரவம்
/
'வேகம்'...பிரட் லீ தீராத மோகம்: ஆஸ்திரேலியாவின் புது கவுரவம்
'வேகம்'...பிரட் லீ தீராத மோகம்: ஆஸ்திரேலியாவின் புது கவுரவம்
'வேகம்'...பிரட் லீ தீராத மோகம்: ஆஸ்திரேலியாவின் புது கவுரவம்
ADDED : டிச 28, 2025 11:27 PM

மெல்போர்ன்: ''மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பந்துவீசியது 'ஸ்பெஷல்' தருணம்,'' என பிரட் லீ தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் 'வேகப்புயல்' பிரட் லீ, 49. இரு முறை மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பந்துவீசினார். 2003, உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் 22 விக்கெட் வீழ்த்தி, ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். 'டி-20' அரங்கில் 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் பவுலர் (எதிர், வங்கம், 2007, கேப்டவுன்). 13 ஆண்டு (1999-2012) ஆதிக்கம் செலுத்திய இவர், 322 சர்வதேச போட்டிகளில் 718 விக்கெட் சாய்த்தார். ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக உள்ளார். இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக, வாழ்நாள் சாதனையாளருக்கான 'ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆப் பேம்' பட்டியலில் நேற்று சேர்க்கப்பட்டார். பிராட்மேன், பாண்டிங், வார்ன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் வரிசையில் இந்த கவுரவம் பெறும் 62வது ஆஸ்திரேலிய வீரரானார்.
பிரட் லீ கூறுகையில்,''2003ல் ஆஸ்திரேலியா உலக கோப்பை வென்றது, தொடர்ந்து 16 டெஸ்ட் வெற்றிகள் பெற்றது போன்றவை முக்கியமான நிகழ்வுகள். தனிப்பட்ட முறையில் பார்த்தால், எனக்கு விக்கெட் வீழ்த்துவது முக்கியமல்ல. 9 வயதிலேயே மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பந்துவீச வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருந்தேன். வேகமாக ஓடுவதற்கு ஏற்ப எனது உடல் அமைப்பும் இருந்தது.
கடந்த 2003ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் முதல் முறையாக மணிக்கு 160.1 கி.மீ., வேகத்தில் பந்துவீசி, இலங்கையின் அட்டபட்டுவை போல்டாக்கினேன். அந்த போட்டியில் நாங்கள் 212 ரன் எடுத்திருந்ததால், நெருக்கடியாக உணர்ந்தோம். நான் சிறப்பாக பந்துவீச வேண்டுமென சக வீரர்கள் எதிர்பார்த்தனர். நல்ல வேகத்தில் சரியான அளவில் பந்துவீசினேன். அப்போது 'ஸ்கோர் போர்டில்' எனது 'வேகம்' 160.1 என காண்பிக்கப்பட்டது. அது 'ஸ்பெஷல்' தருணம். பின் 2005, மார்ச் 5ல் நேப்பியரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் மணிக்கு 160.8 கி.மீ., வேகத்தில் பந்துவீசினேன்.
உலகில் இருவிதமான மனிதர்கள் உண்டு. ஒருவர் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், ஓடி ஒளிந்து கொள்வர். இன்னொருவர் கடைசி வரை போராடுவர். நான் இரண்டாவது ரகம். வெற்றி, தோல்வி, 'டிரா' பற்றி கவலைப்பட மாட்டேன். கடைசி தருணம் வரை களத்தில் போராடுவேன்,''என்றார்.

