/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நம் ரத்தம் ஒன்றல்லோ...தேசம் ஒன்றன்றோ: இன்று போட்டியை புறக்கணிப்போம்: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவேசம்
/
நம் ரத்தம் ஒன்றல்லோ...தேசம் ஒன்றன்றோ: இன்று போட்டியை புறக்கணிப்போம்: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவேசம்
நம் ரத்தம் ஒன்றல்லோ...தேசம் ஒன்றன்றோ: இன்று போட்டியை புறக்கணிப்போம்: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவேசம்
நம் ரத்தம் ஒன்றல்லோ...தேசம் ஒன்றன்றோ: இன்று போட்டியை புறக்கணிப்போம்: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவேசம்
ADDED : செப் 13, 2025 11:52 PM

புதுடில்லி: பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்டும் பி.சி.சி.ஐ.,க்கு எதிர்ப்பு வலுக்கிறது. மனசாட்சியுள்ள 140 கோடி இந்திய மக்களும் பாகிஸ்தான் உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. ரத்தம் சிந்திய நம் உறவுகளை பற்றி கவலைப்படாமல், ஆசிய கோப்பை லீக் போட்டியில் இன்று (துபாய்) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இப்போட்டிக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதை தேசப்பற்று கொண்ட இந்திய ரசிகர்கள் எதிர்க்கின்றனர்.
திவேதி கோபம்: இது குறித்து பஹல்காம் தாக்குதலில் கணவரை பறிகொடுத்த ஐஷன்யா திவேதி கூறுகையில்,''இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பி.சி.சி.ஐ., அனுமதி அளித்திருக்க கூடாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கவில்லை. நமது கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்கின்றனர்? ஒரு சிலரை தவிர மற்றவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென குரல் கொடுக்கவில்லை. இவர்களை துப்பாக்கி முனையில் பி.சி.சி.ஐ., விளையாட வைக்க முடியாது. ஒவ்வொரு வீரரும் தங்கள் நாட்டுக்காக நல்ல முடிவை எடுத்திருக்க வேண்டும். இதை செய்ய தவறிவிட்டனர்.
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. இப்போட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் தாக்குதலுக்கு தான் பயன்படுத்தும். இதை ஒளிபரப்பு நிறுவனம், 'ஸ்பான்சர்'கள் புரிந்து கொள்ளாதது புதிராக உள்ளது. இந்த போட்டியை 'டிவி' மூலம் பார்க்காமல், இந்திய ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும்,'' என்றார்.
சிவசேனா (யுபிடி) கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில்,''ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாயாது என்றனர். இப்போது கிரிக்கெட்டும் ரத்தமும் மட்டும் ஒன்றாக பாயுமா? ஒரே நேரத்தில் போரும் கிரிக்கெட்டும் நடக்குமா? வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு போட்டியை நடத்துகின்றனர்,''என்றார்.
என்னாச்சு காம்பிர்
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்திய அணி தலைமை பயிற்சியாளர் காம்பிர் முன்பு கூறுகையில்,''எல்லை கடந்த பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை பாகிஸ்தானுடன் எந்த உறவும் கூடாது. கிரிக்கெட் போட்டி, பாலிவுட் படம் உட்பட எவ்வித தொடர்பும் தேவையில்லை. இந்திய ராணுவ வீரர்கள், நமது மக்களின் உயிரே முக்கியம்,'' என்றார்.
நேற்று தனது நிலையை மாற்றியிருக்கிறார். இது பற்றி இந்திய அணியின் 'பீல்டிங்' பயிற்சியாளர் டென் டஸ்காட்டே கூறுகையில்,''மக்களின் உணர்வுகளை இந்திய வீரர்கள் புரிந்து கொண்டுள்ளனர். மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். கிரிக்கெட் விளையாடவே துபாய் வந்துள்ளனர். அரசின் உத்தரவுகளை பின்பற்றுகிறோம். தங்களது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை கண்டு கொள்ளாமல் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தும்படி இந்திய வீரர்களை பயிற்சியாளர் காம்பிர் கேட்டுக் கொண்டுள்ளார்,''என்றார்.
ஓடி ஒளியும் நிர்வாகிகள்
துபாயில் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-பாகிஸ்தான் மோதின. இதை காண பெரும்பாலான பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் வந்திருந்தனர். தற்போது இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு காரணமாக, இன்றைய போட்டியை காண பி.சி.சி.ஐ.,செயலர் தேவஜித் சைக்கியா, பிரிமியர் தொடர் சேர்மேன் அருண் துமால், பொருளாளர் பிரப்தேஜ் பாட்யா வர வாய்ப்பு இல்லை. அமெரிக்காவில் இருக்கும் ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷாவும் 'மிஸ்' செய்வார். பி.சி.சி.ஐ., செயல் தலைவரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் செயற்குழு உறுப்பினருமான ராஜீவ் சுக்லா மட்டும் துபாய் மைதானத்திற்கு வரலாம்.
இது வரலாறு
விளையாட்டில் அரசியலை சேர்க்க வேண்டாம் என்பர். உண்மையில் விளையாட்டு என்பது 'நாகரிகமான போர் ஒத்திகை' என்கிறார் நார்பெர்ட் எலியாஸ் (ஜெர்மன், சமூகவியலாளர்).
* கடந்த 1964, டோக்கியோ (ஜப்பான்) ஒலிம்பிக்கை அரசியல் காரணங்களுக்காக சீனா, வடகொரியா, இந்தோனேஷியா புறக்கணித்தன.
* ரஷ்யாவுடன் நிலவிய பனிப்போர் காரணமாக 1980ல் மாஸ்கோ (ரஷ்யா), ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணித்தது. இதற்கு பதிலடியாக 1984ல் லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்க மறுத்தது.
* 1988 சியோல் (தென் கொரியா) ஒலிம்பிக்கை, அண்டை நாடான வட கொரியா புறக்கணித்தது.
* கடந்த 1986ல் இலங்கையில் நடந்த ஆசிய கோப்பை தொடரில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்காமல் விலகியது.
* இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோசமான உறவு காரணமாக 1993 ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டது. இதே போல இம்முறையும் இந்திய அணி பங்கேற்பதை தவிர்த்திருக்க வேண்டும்.