/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தொடரும் ஜெய்ஸ்வால் சோகம் * மீண்டும் வருமா வாய்ப்பு
/
தொடரும் ஜெய்ஸ்வால் சோகம் * மீண்டும் வருமா வாய்ப்பு
தொடரும் ஜெய்ஸ்வால் சோகம் * மீண்டும் வருமா வாய்ப்பு
தொடரும் ஜெய்ஸ்வால் சோகம் * மீண்டும் வருமா வாய்ப்பு
ADDED : டிச 25, 2025 11:01 PM

ஜெய்ப்பூர்: கோலி, ரோகித்திற்குப் பின் மூன்று வித போட்டியிலும் பங்கேற்கும் திறன் பெற்ற வீரராக ஜெய்ஸ்வால் இருந்த போதும், ஒருநாள், 'டி-20' அணியில் புறக்கணிப்பு தொடர்கிறது.
இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 23. கடந்த 2023ல் டெஸ்ட், 'டி-20' (23 போட்டி, 723 ரன், ஸ்டிரைக் ரேட் 164.31) அரங்கில் அறிமுகம் ஆனார். இருப்பினும் 2025, பிப். 6ல் தான் ஒருநாள் போட்டியில் (நாக்பூர்) வாய்ப்பு கிடைத்தது.
பிரிமியர் அரங்கில் 67 போட்டியில் 2166 ரன் (2 சதம், 15 அரைசதம்) அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 152.85 ஆக உள்ளது. எனினும் இவர் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவார் என முத்திரை குத்தப்பட, ஒருநாள், 'டி-20' அணிகளில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.
களமிறங்காத சோகம்
2024ல் 'டி-20' உலக கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடந்தது. இதற்கு அனுபவ வீரர்கள் வேண்டும் என்பதால், ஜெய்ஸ்வால் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை.
அடுத்த 7 மாதத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், 4வது ஸ்பின்னர் வேண்டும் என பயிற்சியாளர் காம்பிர் உறுதியாக நின்றதால், களமிறங்கும் அணியில் மீண்டும் ஜெய்ஸ்வால் இடம் பெற முடியவில்லை.
மறுபடியும் ஏமாற்றம்
தனது கடைசி 5 'டி-20'ல், ஜெய்ஸ்வால் 93, 12, 40, 30, 10 என ரன் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட், 200க்கு அருகில் உள்ளது. எனினும், சமீபத்தில் வெளியான 'டி-20' உலக கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.
சுப்மன் கில் இல்லாத நிலையில், அணியின் இரண்டாவது துவக்க வீரர், விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், இஷான் கிஷானுக்கு வாய்ப்பு தரப்பட்டது.
மீண்டும் தொடருமா
சமீபத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் 116 ரன் எடுத்தார். ஹரியானாவுக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் 50 பந்தில் 101 ரன் (50 ஓவர்) விளாசினார்.
எனினும், அடுத்து வெளியாகும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், சேர்க்கப்படாமல் போகலாம். ஏனெனில் கேப்டன் சுப்மன் கில், மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார்.
ஜெய்ஸ்வால் வயது குறைவு தான். மீண்டும் அணியில் இடம் பெற கால அவகாசம் உள்ளது என்றாலும், ஜெய்ஸ்வால் எங்கு தவறு செய்கிறார், ஏன் அணியில் தேர்வு செய்யப்படுவதில்லை என்பதை அவரிடம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் அவரது தன்னம்பிக்கை பாதிக்கப்படும்.
'மேட்ச் வின்னர்'
கடந்த 2008ல் 19 வயது கோலியை மீண்டும் இந்திய அணிக்கு கொண்டு வந்த முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கூறியது:
நானாக இருந்தால், சுப்மனுக்குப் பதில், ஜெய்ஸ்வாலைத் தான் தேர்வு செய்திருப்பேன். இவர், பல முறை தொடர்ந்து தன்னை நிரூபித்து, 'மேட்ச் வின்னராக' உள்ளார்.
'டி-20' அணியை பொறுத்தவரையில், 'பார்ம்', 'பிட்னஸ்' அடிப்படையில் தான் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு வீரர் விலகினார் என்பதால், மற்றவருக்கு வாய்ப்பு தரக்கூடாது.
தவிர, 'டி-20' கிரிக்கெட் தன்னம்பிக்கை சம்பந்தப்பட்டது. ஒரு வீரர் எடுக்கும் ரன்களை கண்டு கொள்ளாமல் விட்டால், தன்னம்பிக்கை இழந்து விடுவார்,'' என்றார்.
காத்திருக்க வேண்டும்
முன்னாள் வீரர், பயிற்சியாளர் டபிள்யு.வி.ராமன் கூறுகையில்,'' பேச்சுவார்த்தை விபரங்கள் அனைத்தும் வெளியிட முடியாது. தேர்வுக்குழு தலைவர் அகார்கர், ஜெய்ஸ்வாலிடம் பேசியிருக்க வேண்டும். 'உலக' அணி தேர்வு முடிந்து விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது. ஜெய்ஸ்வால் காத்திருக்க வேண்டும். அவர், பல 'உலக' தொடர்களில் விளையாடுவார் என்பது உறுதி,'' என்றார்.

