ADDED : அக் 31, 2024 05:33 AM
நெட்டப்பாக்கம்,: மடுகரை சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மடுகரை மரக்காளீஸ்வரர் கோவில் அருகில் அரசு மூலம் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்காவில், சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்திட ஏணி, ஊஞ்சல், சரக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து, உடைந்து கிடக்கின்றன. இதனால், பூங்காவை சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.
மேலும், பூங்கா முழுதும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. அங்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாடு கட்டி உள்ளதால் சிறுவர்கள் பூங்காவில் விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
சிறுவர்கள், மாணவர்களின் நலன் கருதி சிறுவர் பூங்காவினை சீரமைத்து, பூங்காவிற்கு சுற்றுச்சுவர் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
