ADDED : அக் 25, 2024 06:17 AM

பாகூர்: பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் பால்வாடி தெருவை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (எ) ருத்ரமூர்த்தி 36; டிரைவர். இவருக்கு அர்ச்சனா 24; என்ற மனைவியும் கனிஷ் 5; என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், ருத்ரமூர்த்தி நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள சீரடி சாய்பாபா நகரின் பின்புறத்தில் இருக்கும் மரவள்ளி தோட்டத்திற்கு சென்று உள்ளார். அப்போது, அங்கு ஏதோ விஷப்பூச்சி அவரது வலது கணுக்காலில் கடித்துள்ளது.
வலி அதிகமானதால் பாகூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ருத்ரமூர்த்தி மனைவி அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

