ADDED : ஜூலை 17, 2025 06:36 AM
புதுச்சேரி : சலவை கூடம் கட்டித் தரக்கோரி, புதிரை வண்ணார் சமூகத்தினர், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லியனுார், மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் உழவர்கரை நகராட்சி உள்ளிட்ட பகுதியில் புதிரை வண்ணார் சமூகத்தை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக சலவைத் தொழில் செய்து வருகின்றனர்.
பட்டியலின சலவை தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த இவர்கள், சிறப்புக் கூறு நிதியின் மூலம் வில்லியனுார் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் சலவை கூடம் கட்டித் தர வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுவரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், புதிரை வண்ணார் சமூகத்தினர், வில்லியனுார், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லியனுாரில் நடந்த போராட்டத்தில், புதிரை வண்ணார் விடுதலை இயக்க தலைவர் தெய்வநீதி, பொதுச் செயலாளர் அர்ஜுனன், வில்லியனுார் கொம்யூன் தலைமை நிர்வாகிகள் கோவிந்தன், சுப்ரமணியன், கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில், சலவை கூடம் கட்டித் தர மறுக்கும் ஆணையர்களை கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
