/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓசி 'ஏசி'யில் ஓய்வெடுத்த நபரால் துாக்கத்தை தொலைத்த போலீசார்
/
ஓசி 'ஏசி'யில் ஓய்வெடுத்த நபரால் துாக்கத்தை தொலைத்த போலீசார்
ஓசி 'ஏசி'யில் ஓய்வெடுத்த நபரால் துாக்கத்தை தொலைத்த போலீசார்
ஓசி 'ஏசி'யில் ஓய்வெடுத்த நபரால் துாக்கத்தை தொலைத்த போலீசார்
ADDED : ஏப் 06, 2025 06:32 AM
வில்லியனுாரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் 10க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், தனியார் வங்கி ஏ.டி.எம்.,களில் இரவு நேரங்களில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இரவு காவலர்கள் இருப்பதில்லை.
கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வீதிகளில் சுற்றி திரிந்த நபர் ஒருவர், இரவு நேரங்களில், ஏ.டி.எம்., மையத்தில் ஏசியில் படுத்து துாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு, வில்லியனுார் பெருமாள் கோவில் தெருவில் உள்ள கனரா ஏ.டி.எம்., மையத்தில் இருந்து 'அலாரம் ஒலித்தது.
அடுத்த சில நொடிகளில், வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்ட வங்கி மேலாளர், ஏ.டி.எம்., மையத்தில் இருந்து 'அலர்ட்' மெசேஜ் வந்த தகவலை கூறினர். அதற்குள் போலீஸ் தலைமையகத்தில் இருந்து வில்லியனுாரில், ஏ.டி.எம்.,ல் கொள்ளையா என விசாரித்தனர்.
பதற்றமடைந்த 5க்கும் மேற்பட்ட போலீசார் அலறி அடித்துக் கொண்டு சம்மந்தப்பட்ட ஏ.டி.எம்., ற்கு சென்றனர். அப்போது, அங்கு, ஏ.டி.எம்., மையத்தில் இருந்த மர்ம நபர், மிஷினை சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடன் சுதாரித்து கொண்ட போலீசார், அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், அந்த நபர் மனநிலை பாதித்தவர் என்பதும், கடந்த சில மாதங்களாக வில்லியனுார் வீதிகளில் சுற்றி திருந்து வருவதும், இரவு நேரங்களில் புழுக்கம் மற்றும் கொசுக்கடிக்கு பயந்து ஏ.டி.எம்., மையங்களில் படுத்து துாங்குவதும், அன்று அதிக குளிரினால், படுக்கையிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.
அதில் விழித்துக் கொண்ட அந்த நபர், ஏ.சி.,யை நிறுத்துவதற்காக ஒயரை பிடித்து இழுத்ததை உறுதி செய்த பிறகே போலீசார் நிம்மதியடைந்தனர்.
ஆனால், அவர் மனநிலை பாதித்தவர் என்பதை உயர் அதிகாரிகளுக்கு எப்படி நிரூபிப்பது என புரியாமல் தவித்த போலீசார், பின்னர் அந்த நபரின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்து, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விபரத்தை கூறினர்.
அதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, பிடிபட்ட மனநிலை பாதித்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அதற்குள் பொழுது விடிந்துவிட்டது.

