/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆபரேஷன் திரிசூல்: 48 பேர் மீது வழக்கு
/
ஆபரேஷன் திரிசூல்: 48 பேர் மீது வழக்கு
ADDED : டிச 30, 2024 06:25 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று நடந்த ஆபரேஷன் திரிசூல் மூலம் புத்தாண்டு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக 48 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை ஒழிப்பதற்கும் ஆபரேஷன் திரிசூல் திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி, ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்களின் வீடுகளில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்ய நேற்று அதிகாலை ஆபரேஷன் திரிசூல் மேற்கொள்ளப்பட்டது.
டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியார் எஸ்.பி., கலைவாணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், கிரைம் போலீசார் இணைந்து புதுச்சேரி முழுதும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், 269க்கும் மேற்பட்ட குற்ற பின்னணி உடைய நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், 4 பிடியாணை நிறைவேற்றப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு, மக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடிய 48 பேர் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த ஒரு குற்றவாளி, ஆபத்தான ஆயுதம் வைத்திருந்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல், காரைக்கால் பகுதிகளில் ஆப்ரேஷன் திரிசூல் நேற்று நடந்தது.
இதுகுறித்து சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறுகையில், 'ஆப்ரேஷன் திரிசூல் என்பது பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு விரைவாக தீர்வு காணும் திட்டமாகும். எதிர்காலத்தில் குற்றச் செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

