நெல்லித்தோப்பில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் ஓம்சக்தி சேகர் தகவல்
நெல்லித்தோப்பில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் ஓம்சக்தி சேகர் தகவல்
ADDED : மே 06, 2025 05:00 AM
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாவிடில், போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின், பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஒரு சில பணிகள் காலதாமதத்தால் மக்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது.
உள்ளாட்சித் துறை மூலம் குப்பைகள் அகற்றும் பணிகள், தெருக்களை சுத்தம் செய்யும் பணிகள் சரிவர செய்யப்படுவதில்லை. குறிப்பாக, நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதி, திருவள்ளுவர் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.மக்களிடம் குப்பை வரி, வீட்டு வரிகளைநகராட்சி நிர்வாகம் பெற்றுக் கொண்டு, அவர்களின் தேவைகளை செய்யாமல் இருப்பது ஏற்புடையது அல்ல.
பொதுப்பணித்துறை சார்பில் காமராஜர் சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் தற்போது வரை நிறைவடையாமல் உள்ளது. இதனை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தொகுதியில் பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக மாற்றி அமைத்து, சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மக்களை திரட்டி சம்பந்தப்பட்ட துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
