ADDED : பிப் 20, 2024 11:30 PM

பாகூர், : சேலியமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில், கவிஞரேறு வாணிதாசனார் சிலையை, சபாநாயகர் செல்வம், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தனர்.
ஏம்பலம் தொகுதி, சேலியமேடு கிராமத்தில் கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் வாணிதாசனாரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பங்களிப்பில், வாணிதாசனாரின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் பக்கிரிசாமி வரவேற்றார். சபாநாயகர் செல்வம், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் வாணிதாசனாரின் சிலையை திறந்து வைத்து, மரியாதை செலுத்தினர்.
பள்ளிக் கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு வாழ்த்தி பேசினார். ஓய்வு பெற்ற விரிவுரையாளர் சபாபதி தொகுப்புரையாற்றினார்.
விழாவையொட்டி, பள்ளி மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. விழா குழு தலைவர் வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலியபெருமாள், அரியரன், வாணிதாசனாரின் குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

