/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து விவகாரத்தில் அரசு துறைகளின் மவுனம் கலைந்தது: நீண்ட பட்டியல் போட்டு ஒருவழியாக விளக்கம்
/
போலி மருந்து விவகாரத்தில் அரசு துறைகளின் மவுனம் கலைந்தது: நீண்ட பட்டியல் போட்டு ஒருவழியாக விளக்கம்
போலி மருந்து விவகாரத்தில் அரசு துறைகளின் மவுனம் கலைந்தது: நீண்ட பட்டியல் போட்டு ஒருவழியாக விளக்கம்
போலி மருந்து விவகாரத்தில் அரசு துறைகளின் மவுனம் கலைந்தது: நீண்ட பட்டியல் போட்டு ஒருவழியாக விளக்கம்
ADDED : டிச 20, 2025 06:24 AM

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்தை தொடர்ந்துஒருவழியாக அரசு துறைகள் விளக்கம் அளித்துள்ளன. புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, சுகாதார துறையும், மருந்து கட்டுப்பாட்டு துறையும் போலி மருந்து விவகாரம் தொடர்பாக நீண்ட விளக்கம் அளித்துள்ளன.
சுகாதார துறை இயக்குநர் சவுத்ரி முகமது யாசின் செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் தொடர்பாக மருந்து ஆய்வாளர்கள் மூலம் மருந்துகள் கையகப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வின்போது, உரிமம் இல்லாமல் மருந்துகளை சேமித்தல், விற்பனை செய்தல், காலாவதி அல்லது போலி மருந்துகள், மூலப்பொருட்கள், பேக்கிங் பொருட்கள், உபகரணங்கள் வைத்திருந்தது என, பல முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
இந்த சட்ட மீறல்கள் காரணமாக, அங்கீகாரம் இல்லாத செயல்பாடுகள் தொடர்ந்து நடக்காமல் இருக்க போலி மருந்து சம்மந்தப்பட்ட நிறுவனங்கள், இடங்கள் முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவின் பேரில், சீல் வைக்கப்பட்டன.
பறிமுதல் நடவடிக்கை மேற்கொண்டு, தயாராக இருந்த மருந்துகள், முதன்மை பேக்கிங் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியன துறையின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
பறிமுதல் செய்த பொருட்கள் சேமிக்கப்பட்டு, அதில், 15 மருந்து தயாரிப்பு முறைகள் மற்றும் 20 மருந்து மூலப்பொருள் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சென்னை மத்திய மருந்து சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக, சட்டப்படி வழக்குத் தொடருதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டால், உடனே தெரிவிக்க மருந்தகங்கள் இணைந்த எச்சரிக்கை அமைப்பை இத்துறை துவங்கியுள்ளது. இதற்கான கியூர்.ஆர் குறியீடு மருந்தகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, மருந்து கட்டுப்பாட்டுத் துறையும், பொது சுகாதாரத் துறையும் இணைந்து தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன. காரைக்கால் பகுதியில் சந்தேகத்திற்குரிய மருந்து விநியோகம் கண்டறியப்பட்டு, முடக்கப்பட்டு, திரும்ப பெறப்பட்டன.
புதுச்சேரி பிராந்தியத்தில் அனைத்து மொத்த விற்பனை நிறுவனங்களிலும் சரிபார்ப்பு பணிகள் தொடர்கின்றன. இதில் இரண்டு மொத்த விற்பனை நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, நோட்டீஸ் அனுப்பி, விற்பனையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சில்லறை மருந்து விற்பனை நிலையங்களில் தொடர் சோதனைகள் நடந்து வருகின்றன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உரிமத்தை நிறுத்தி வைத்தல் அல்லது ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருந்து விற்பனையாளர்கள், மருந்தாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரும் மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் மற்றும் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
சந்தேகத்திற்குரிய மருந்துகள் விற்பனையை நிறுத்த சில்லறை மற்றும் மொத்த விற்பனை மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், கிளினிக் சார்ந்த மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் என, அனைத்து உரிமைதாரர்களும், ஒழுங்குமுறை விதிகளின்படி 100 சதவீதம் மருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும். தரப்பரிசோதனைக்கு முன் மருந்தை பொதுமக்களுக்கு விற்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்துறை அவ்வப்போது வெளியிடும் எச்சரிக்கை, சுற்றறிக்கைகள், தரமற்ற மருந்துகள் குறித்த அறிக்கைகள் விழிப்புணர்விற்காக துறை சார்ந்த இணையதளத்தில் (https://drugscontrol.py.gov.in) பதிவேற்றி வருகிறது. இதனை பொதுமக்கள் பார்க்கலாம்.
சட்டவிரோத மருந்து விற்பனை அல்லது விநியோகம் குறித்து சந்தேகம் இருந்தால், பொதுமக்கள் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு அதிகாரப்பூர்வ தொலைபேசி எண் -0413-2353647 மற்றும் மருந்து ஆய்வாளர்களின் வாட்ஸ் ஆப் எண்கள் (7338443906, 9003965022, 7338894408, 8883848976) மூலம் புகார் அளிக்கலாம்.

