ஓட்டு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
ஓட்டு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
ADDED : மார் 19, 2026 04:33 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பு அறைகளில் சேமித்து வைப்பதற்கும், ஓட்டு எண்ணிக்கை பணிக்கும் தேவையான ஆரம்ப கட்ட ஏற்பாடுகளை மாவட்டத் தேர்தல் அலுவலகம் துவக்கியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கான ஓட்டுஎண்ணிக்கை மையங்களாக லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு அரசுப் பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 9ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், மின்னனு ஓட்டுப் பதிவு இயந்திரம் மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி மையத்தில் உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், பாகூர், நெட்டப்பாக்கம் ஆகிய 9 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கையும்,மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மையத்தில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனுார், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய 8 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கையும், தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மையத்தில் தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன் ஆகிய 6 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
ஓட்டு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் நேற்று முன்தினம் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இதில், சப் கலெக்டர் சுதாகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
