புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க திட்ட வரைபடத்திற்கு அனுமதி
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க திட்ட வரைபடத்திற்கு அனுமதி
ADDED : நவ 22, 2024 05:45 AM

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்குவதற்கான திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையம் அனுமதித்துள்ளதாக இயக்குநர் ராஜசேகர ரெட்டி தெரிவித்தார்.
புதுச்சேரியில் டிசம்பர் 20ம் தேதி மீண்டும் விமான சேவை துவங்க உள்ளதையொட்டி, அதுபற்றி விவாதிக்க, விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம் நேற்று நடந்தது.
வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், கலெக்டர்கள் புதுச்சேரி குலோத்துங்கன், விழுப்புரம் கலெக்டர் பழனி, விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி, சீனியர் எஸ்.பி., கலைவாணன், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ரினீஷ் சந்திரா, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் 20ம் தேதி விமான சேவை மீண்டும் துவங்க உள்ளதால், பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. விமானங்கள் பறக்கும்போது, பறவைகள் பறந்தால் விபரீதம் ஏற்படும் என்பதால், விமான நிலையத்தை சுற்றிலும் குப்பை தேங்காமல் இருக்க வேண்டும். விமான ஓடுதளத்தில் நாய்கள் புகாமல் இருக்க வேண்டும். பயணிகளுக்கான கழிவறை மற்றும் குடிநீர், உணவகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடவும், விமான நிலையத்தில் இருந்து பிறபகுதிகளுக்கு செல்ல பொது போக்கவரத்து வசதி செய்திட அறிவுறுத்தப்பட்டது.
பின், புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி கூறியதாவது:
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து 250 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டிய இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் கழிவுநீர் சுத்திகரிப்பு மைய வளாக இடமும் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது.
அதனடிப்படையில் விமான நிலைய விரிவாக்கத் திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கான தமிழக அரசின் நிலத்துக்கு விலை நிர்ணயம் தோராயமாக புதுச்சேரி அரசுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி மத்திய அரசிடம் நிதி பெற்று விமான நிலைய விரிவாக்கப்பணிகள் துவங்கப்படும்.
தற்போது தனியார் விமான சேவை நிறுவனம் 19 பேர் செல்லும் விமானத்தை இயக்க முன்வந்துள்ளது. விமான சேவை தொடங்கும் நிலையில், பயணிகளுக்கான உணவு உள்ளிட்ட அரங்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.
