ADDED : மே 19, 2024 03:43 AM

புதுச்சேரி : சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி, பழமையான பொருட்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சர்வதேச அருங்காட்சியக கூட்டமைப்பு கருப்பொருள் மையமாக வைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நம்முன்னோர் வாழ்வு முறைகள், அறிஞர்களின் சிறப்புகள், இலக்கிய, இதிகாச ஓலைச் சுவடிகள் போன்றவை அரிய பொக்கிஷமாகும்.
இவற்றை பாதுகாத்து அதன் சிறப்புகளை அறிந்துகொள்ள வசதியாக அரசு அருங்காட்சியங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது.
புதுச்சேரியில், சாமிப் பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் புழங்கு பொருள் சேகரிப்பாளர்; கூட்டமைப்பின் தலைவர் அய்யனார்.
இவர், முன்னோர்கள் பயன்படுத்திய பொக்கிஷங்களை பார்வையாளர்கள் பயன்பெறும் வகையில் தனது இல்லத்தில் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
பல நுாற்றாண்டுகளுக்கு முன் பயன்படுத்திய , கஜலட்சுமி விளக்கு, விஷ்ணு விளக்கு, மாட விளக்கு, கிளி விளக்கு, பாவை விளக்குகள், தொங்கும் விளக்குகள், மணிகள் குத்து விளக்கு உள்ளிட்ட பல பாரம்பரிய வீட்டு புழங்கு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில், அருண் நாகலிங்கம், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நமது கலாசாரம், அதன் முக்கியத்துவம் பற்றி பேசினார். புதுச்சேரியின் வரலாற்று தொன்மையின் சிறப்புகளை அருங்காட்சியக தலைவர் அய்யனார் விளக்கம் அளித்தார்.
அருங்காட்சியகம் தொடர்பான பதாகைகளை மாணவர்கள் ஏந்தி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

