ADDED : ஏப் 29, 2024 05:17 AM
புதுச்சேரி : மனநல பிரச்னைக்கு அரசு மருத்துவமனையில் செயல்படும் இலவச மனநல ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
உலக சுகாதார நிறுவனம் மன நலத்தின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு ஆண்டும் வலியுறுத்தி வருகிறது. உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் மனநலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய்,மூளையில் ரத்தக் கசிவு, இருதய நோய்கள் போன்ற பல்வேறு உடல் சார்ந்த நோய்களுக்கு மன உளைச்சல் காரணமாக உள்ளது.
உடலை ஆரோக்கியமாக வைப்பதுபோல் மனதையும் ஆரோக்கியமாக வைக்க வேண்டும். மாணவர்களிடையே தேர்வு குறித்த பயம், தேர்வு முடிவு குறித்த பயம், நீட் தேர்வு குறித்த பயம், தற்கொலை சிந்தனை, போன்றவை அதிகமாக உள்ளன. மன உளைச்சலை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து இதனை சரி செய்வதன் மூலம் மன நோய்களை தடுக்கலாம், தற்கொலைகளையும் தடுக்கலாம்.
புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் 24 மணி நேரமும் இலவச மனநல ஆலோசனை தொலைபேசி சேவை மையம் செயல்படுகிறது. மக்கள் மனநல ஆலோசனைக்கு 14416 அல்லது 1800-891-4416 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

