/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் முதல் முறையாக 'பசுமை ஓட்டு சாவடி' வாக்காளர்களுக்கு மோர், கூழ் உண்டு
/
புதுச்சேரியில் முதல் முறையாக 'பசுமை ஓட்டு சாவடி' வாக்காளர்களுக்கு மோர், கூழ் உண்டு
புதுச்சேரியில் முதல் முறையாக 'பசுமை ஓட்டு சாவடி' வாக்காளர்களுக்கு மோர், கூழ் உண்டு
புதுச்சேரியில் முதல் முறையாக 'பசுமை ஓட்டு சாவடி' வாக்காளர்களுக்கு மோர், கூழ் உண்டு
ADDED : ஏப் 07, 2024 04:54 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் முதல் முறையாக 'ஹெரிட்டேஜ்' கட்டடத்தில் 'பசுமை ஓட்டுச் சாவடி' அமைக்கப் படுகிறது.
நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக, புதுச்சேரி தேர்தல் துறை, மாநிலம் முழுவதும் ஓட்டுச் சாவடிகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஓட்டு போட வருபவர்கள் வரிசையில் நிற்கும்போது வெயிலில் இருந்து தப்பிக்க ஓட்டுச் சாவடி வாயில்களில் பெரிய இரும்பு ஷீட் கூரை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக வீல் சேர் உள்ளிட்ட வசதிகள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலை பசுமை தேர்தலாக மாற்றுவதற்கு ஏதுவாக ஓட்டுச் சாவடிக்கு வருபவர்கள் வாகனங்களை தவிர்த்து விட்டு நடந்து வருமாறும் தேர்தல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், ஒரு படி மேலே சென்று முழுக்க, முழுக்க ஒரு ஓட்டுச் சாவடி பசுமை ஓட்டுச் சாவடியாக செயல்பட போகிறது. இந்த பசுமை ஓட்டுச்சாவடி புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள 138 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹெரிட்டேஜ் கட்டடமான வ. உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட உள்ளது.
இந்த பள்ளி வளாகத்தில் 14/1, 14/2 ஆகிய இரண்டு ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி வாயிலில் வாழை மரங்கள், இளநீர் கட்டப்பட்டு, பச்சை தென்னங்கீற்று பந்தல், மா, தென்னங்கீற்று ஓலை தோரணங்கள் கட்டப் படுகிறது.
ஓட்டு போட வருபவர்களின் தாகம் தணிக்க மண் பானை குடிநீர், மோர் மற்றும் கேப்பைகூழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும் அந்த ஓட்டுச் சாவடி வளாகமே முழுக்க குளிர்ச்சியாக காட்சியளிப்பதற்கு பல்வேறு பணிகளை தேர்தல் துறை செய்து வருகிறது.

