/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப்பதிவன்று சம்பளத்துடன் விடுமுறை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தகவல்
/
ஓட்டுப்பதிவன்று சம்பளத்துடன் விடுமுறை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தகவல்
ஓட்டுப்பதிவன்று சம்பளத்துடன் விடுமுறை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தகவல்
ஓட்டுப்பதிவன்று சம்பளத்துடன் விடுமுறை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தகவல்
ADDED : ஏப் 13, 2024 04:44 AM

புதுச்சேரி: லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
பொதுப் பார்வையாளர் பியுஷ் சிங்லா, காவல் பார்வையாளர் அமர்தீப் சிங் ராய், செலவினப் பார்வையாளர்கள் முகமது மன்சருல் ஹாசன், லட்சுமிகாந்தா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கூறியதாவது:
ஓட்டுப்பதிவு நாளன்று அனைத்துத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி முதல் ஓட்டுப்பதிவு நாளான 19ம் தேதி வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். சட்டவிரோதமாக மது பானங்கள் பதுக்குதல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பிற தொகுதிகளில் இருந்து வந்து பிரசாரம் செய்ய தங்கியிருப்பவர்கள், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், மின்னணு ஊடகங்களில் வாயிலாக தேர்தல் கருத்துக் கணிப்பு மற்றும் ஓட்டு கணக்கெடுப்பு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடுதல் போன்றவை வரும் 17ம் தேதி மாலை 6:00 மணி முதல் 144 சட்டப் பிரிவின்கீழ் தடை செய்யப்படுகின்றது.
இதே போல் 17ம் தேதி முதல் ஓட்டுப் பதிவு முடியும் வரை வெடி மருந்து மற்றும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். ஓட்டுப்பதிவிற்கு முந்தைய நாள் மாலை முதல் ஓட்டுப்பதிவு நாள் வரை சினிமா தியேட்டர்கள் மூடப்பட வேண்டும்.
பதற்றமான ஓட்டுச்வாவடிகளில் மாநில காவல் துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படையினர் ஈடுபடுத்தப்படுவர். 154 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் இணையவழி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா மாநில எல்லை கண்காணிப்பு குறித்து விளக்கினார். தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் திருப்தியளிப்பதாக தெரிவித்தனர்.
சப் கலெக்டர்கள் சோமசேகர் அப்பாராவ் கொட்டாரு, அர்ஜூன் ராமகிருஷ்ணன், மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரி வினயராஜ், உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா, கிழக்கு எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.

