ADDED : ஏப் 15, 2024 03:46 AM
பாகூர் : கொத்தனாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர் அடுத்த மணமேடு எம்.ஏ.எஸ்., நகரை சேர்ந்தவர் ராஜா 28; கொத்தனார். இவர் தற்பொழுது தவளகுப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் வசித்து வருகிறார். இவருக்கும், பாகூரைச் சேர்ந்த பிரவின் என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், ராஜா நேற்று முன்தினம் பாகூர் ஏரிக்கரை சாராயக்கடை அருகே புளிய மரத்தின் கீழ் படுத்து கொண்டிருந்தார்.
அப்பொழுது, அங்கு வந்த பாகூரைச் சேர்ந்த பிரவீன் மற்றும் அவரது நண்பர் வினோத் இருவரும் சேர்ந்து, ராஜாவிடம், தகராறு செய்து உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த ராஜா பாகூர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் பாகூர் போலீசார் பிரவீன், வினோத் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.

