/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செம்மண் குவாரி வழக்கு மேலும் ஒரு சாட்சி பல்டி
/
செம்மண் குவாரி வழக்கு மேலும் ஒரு சாட்சி பல்டி
ADDED : ஏப் 02, 2024 04:33 AM
விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பல்டி அடித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் உள்ள 67 அரசு சாட்சிகளில், இதுவரை 18 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 14 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
நேற்று நடந்த விசாரணையின் போது, அரசு தரப்பு 19வது சாட்சியாக, ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர், புகாருக்குள்ளான குவாரிக்கு நான் ஆய்வுக்கு போகவே இல்லை, அப்போதைய உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதால், கோப்புகளில் கையெழுத்திட்டேன்.
எனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை, எனக்கு எதுவும் தெரியாது எனக்கூறி, அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, விசாரணை நாளை (இன்று 2ம் தேதி) நடைபெறும் என உத்தரவிட்டார்.

