/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'லேசர் கன் ' மூலம் வேக அளவை கணக்கிட்டு 104 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
/
'லேசர் கன் ' மூலம் வேக அளவை கணக்கிட்டு 104 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
'லேசர் கன் ' மூலம் வேக அளவை கணக்கிட்டு 104 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
'லேசர் கன் ' மூலம் வேக அளவை கணக்கிட்டு 104 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 12, 2024 04:34 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் அதிவேக வாகனங்களால் ஏற்படும் விபத்து உயிரிழப்பு எதிரொலியால், லேசர் கன் மூலம் வாகன வேகத்தை கண்டறிந்து 104 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அரசு பஸ் உள்ளிட்ட பொதுபோக்குவரத்து வாகனங்கள் 80 கி.மீ., வேகத்தை தாண்டிச் செல்ல கூடாது என உத்தரவிட்டுள்ளது.
அதற்காக, பொதுபோக்குவரத்து வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், பல வாகனங்கள் வேக கட்டுப்பாட்டு கருவி இணைப்பை நீக்கி விட்டு வாகனங்களை அதிவேகமாக இயக்குகின்றனர்.
புதுச்சேரி சின்னஞ்சிறிய பகுதி. மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அகல சாலைகள், மேம்பாலம் இல்லை.
குறுகிய சாலைகளில் தான் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், குறுகிய சாலைகளில் பைக், ஆட்டோ, கார்கள் ரேஸ் ஓட்டுவதுபோல் அதிவேகமாக செல்கின்றது. கடந்த ஒரு மாதத்தில் ஏராளமான விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கிழக்கு போக்குவரத்து போலீஸ் சார்பில் மரப்பாலம் சிக்னல் அருகே, எஸ்.பி. செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் லேசர் கன் மூலம் வாகனத்தின் வேகத்தை கணக்கிட்டு வழக்கு பதிவு செய்தனர்.
நகர பகுதியில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து அரியாங்குப்பம் வரை 30 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் செல்லலாம். அந்த வேகத்தை தாண்டி சென்ற வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
லேசர் கன் மூலம் அளவுக்கு அதிகமான வேகத்தில் வரும் வாகனத்தை புகைப்படம் பிடித்து, வழக்கு பதிவு செய்து வாகன உரிமையாளர் மொபைல்போனுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்ட தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி, நேற்று காலை மட்டும் 104 வாகனங்கள் அதிவேகமாக சென்றதாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

