கூட்டணி தொடர்பான எதிர்பார்ப்புகள் என்ன? விஜய் உடன் 'ஒன் டூ ஒன்' பேச ராகுல் உத்தரவு
கூட்டணி தொடர்பான எதிர்பார்ப்புகள் என்ன? விஜய் உடன் 'ஒன் டூ ஒன்' பேச ராகுல் உத்தரவு
ADDED : நவ 22, 2025 03:15 AM

கூட்டணி தொடர்பாக, விஜயின் எதிர்பார்ப்புகளை அறிய, அவருடன் 'ஒன் டூ ஒன்'னாக பேசும்படி, காங்., நிர்வாகிகளுக்கு ராகுல் உத்தரவிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு போட்டியாக, த.வெ.க., தலைமையில் தனி கூட்டணி அமைக்க, அக்கட்சி தலைவர் விஜய் முயற்சித்து வருகிறார்.
ஆட்சியில் பங்கு
கூட்டணிக்கு கட்சிகளை இழுக்க, தங்கள் கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால், இதுவரை எந்த கட்சியும், த.வெ.க., கூட்டணியில் இணையவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய சில கட்சிகள், த.வெ.க., கூட்டணியில் இணைய, மறைமுகமாக பேச்சு நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், காங்., கட்சியை இழுப்பதற்கான வேலைகளை விஜய் துவக்கி உள்ளார். காங்., மூத்த தலைவர் ராகுலுடன், ஏற்கனவே, தனக்குள்ள நட்பை பயன்படுத்தி, கூட்டணி அமைக்கும் முயற்சியை துவக்கி உள்ளார். இந்நிலையில், அவரது எதிர்பார்ப்புகள் குறித்து, 'ஒன் டூ ஒன்' பேசும்படி, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு, ராகுல் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
58 ஆண்டுகள்
இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் செய்ய, காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் ஆதரவு தேவை என, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் த.வெ.க.,- காங்கிரஸ் கட்சியுடன், மேலும் சில கட்சிகளை, கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்தித்தால், ஆட்சியை பிடிக்கலாம்.
ஆட்சியில் பங்கு என்ற அடிப்படையில், காங்கிரஸ் ஆட்சி 58 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் அமையும். காங்கிரஸ்காரர்களின் நீண்டகால எண்ணம் நிறைவேறும்.
இதை ராகுலிடமும், காங்கிரஸ் டில்லி தலைவர்களிடமும், விஜய் தரப்பில் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கூட்டணி தொடர்பாக விஜயின் எதிர்பார்ப்புகள், தேர்தலை சந்திக்க, அவர் வகுத்துள்ள வியூகங்கள் என்ன என்பதை நேரடியாக கேட்க, காங்., நிர்வாகிகளுக்கு, ராகுல் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில், தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், விஜயை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளார். விரைவில் டில்லியில் இருந்து வரும் காங்., முக்கிய தலைவர் ஒருவர் விஜயை சந்தித்து பேச ராகுல் பணித்துள்ளார்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-நமது நிருபர்-

