தி.மு.க.,வுடன் சண்டை போட்டு கூடுதல் 'சீட்' கேட்போம்: திருமா
தி.மு.க.,வுடன் சண்டை போட்டு கூடுதல் 'சீட்' கேட்போம்: திருமா
ADDED : ஜன 01, 2026 04:12 AM

சென்னை: ''தி.மு.க., கூட்டணியில் சண்டை போட்டு, கூடுதல் 'சீட்' கேட்போமே தவிர, அக்கூட்டணியில் இருந்து விலக மாட்டோம்,'' என வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவர் கூறியதாவது: தி.மு.க., வலிமையான இயக்கம்; 75 ஆண்டுகள் கடந்து, இன்றும் ஆட்சியில் இருக்கும் இயக்கம். அதற்கு நாங்கள் முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு பதில் சொல்ல தெரியும்.
நான் தி.மு.க.,வுக்காக பேசவில்லை. நான் உள்வாங்கிய அரசியலுக்காக பேசுகிறேன். சிலருடன் சேர்ந்தால் பாதுகாப்பாகவும் இருக்கும்; பொருளாதாரத்திலும் மேம்பாடு வரும் என்பதற்காக, கொள்கையை மாற்றிக்கொள்ள முடியாது.
'நடிகர் கட்சி துவங்கி விட்டார்; அவர் பக்கம் தான் மக்கள் சாய்கின்றனர். நீங்கள் எல்லாம் தோற்று விடுவீர்கள்' என கூறுகின்றனர். அவ்வாறு தோற்றால் தான் என்ன? அதற்காக மானத்தை விட்டு விட்டு போக முடியுமா? அரசியலில் மானம் என்பதும் முக்கியம் தான். யாருக்காகவும், எதற்காகவும் கொள்கையை விட்டு விட்டு, யாரோடும் செல்ல முடியாது.
தனிப்பட்ட முறையில் யாருடனும் உறவு இல்லை; அப்படித்தான் தி.மு.க.,வுடனும் உள்ளது. மதச்சார்பற்ற கூட்டணி என்பதால், 'இண்டி' கூட்டணியில் தொடர்கிறோம்.
தி.மு.க., கூட்டணியில் 'சீட்' குறைவாக கொடுத்தால், அதில் என்ன பாதிப்பு இருக்கப் போகிறது? முடிந்தால் சண்டை போட்டு கூடுதல் சீட் வாங்குவோம்; இல்லையென்றால் அனுசரித்து செல்வோம். ஆனால், சீட் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணத்தில், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலக மாட்டோம்.
இந்த திருமாவளவன் ஒருபோதும் சீட்டுக்காக அரசியல் செய்ய மாட்டான். கட்சியினர் ஒவ்வொருவருக்கும் இது தான் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.

