UPDATED : மே 19, 2024 03:27 AM
ADDED : மே 19, 2024 02:23 AM

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் 13ல் ஓட்டுப்பதிவு நடந்தது. வழக்கமாக இங்கு தேர்தல் நடக்கும் போது வன்முறை, தீவிரவாதிகளின் தாக்குதல், தேர்தல் புறக்கணிப்பு என, பல பிரச்னைகள் ஏற்படும். இதனால் ஓட்டு சதவீதமும் மிக குறைவாக இருக்கும்; ஆனால், இந்த முறை எந்த பிரச்னையும் இல்லாமல், அமைதியாக தேர்தல் நடைபெற்றது.
கடந்த 1996க்கு பின், அதிக ஓட்டுப் பதிவும் நடந்துள்ளது. இந்த முறை, 38.49 சதவீதமும்; 1996ல் 40.94, 2019ல் 14.4, 2014ல் 25.8 சதவீதமும் ஓட்டு பதிவாகி உள்ளது.
இதற்கு காரணம், 'காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மோடி நீக்கியது தான் காரணம்' என்கின்றனர். அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருவதால், ஸ்ரீநகர் வியாபாரிகளுக்கு நல்ல வருமானம்; ஹோட்டல்கள் நிறைந்து வழிகின்றன.
'இது 370ஐ நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஓட்டளிப்பு. மோடியை எதிர்த்து ஓட்டளிக்க அதிக அளவில் மக்கள் வந்துள்ளனர்' என்கின்றனர் எதிர் தரப்பினர். 'காஷ்மீரில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தாலும், மீண்டும் 370 சட்டத்தை திரும்ப கொண்டு வர முடியாது' என, ஏற்கனவே மோடி சொல்லி விட்டார்.
மேலும், இந்த சட்டப்பிரிவை காங்., மீண்டும் கொண்டு வருவது குறித்து, ராகுல் வாயே திறக்கவில்லை. எதிர்க்கட்சியினரும் இது குறித்து அதிகமாக பிரசாரம் செய்யவில்லை. எது எப்படியோ, ஸ்ரீநகரில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஓட்டு சதவீதம் அதிகரித்தது, மத்திய அரசையும், தேர்தல் கமிஷனையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

