3,224 சதுர அடி நிலத்தை மீட்க சென்ற போது சிக்கிய 18,000 சதுர அடி ஆக்கிரமிப்பு
3,224 சதுர அடி நிலத்தை மீட்க சென்ற போது சிக்கிய 18,000 சதுர அடி ஆக்கிரமிப்பு
UPDATED : பிப் 21, 2024 05:00 AM
ADDED : பிப் 21, 2024 01:29 AM

மடிப்பாக்கம்:அரசு நிலம் 3,224 சதுர அடி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக வந்த தகவலையடுத்து, மடிப்பாக்கத்தில் வருவாய் துறையின் ஆய்வு செய்தனர். அதில், அடுத்தடுத்து 13 இடங்களிலக 18,000 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பது தெரிந்து, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெருங்குடி மண்டலம், வார்டு 188க்கு உட்பட்டது மடிப்பாக்கம். இதன் விரிவு பகுதியாக -ராம் நகர், பாகீரதி நகர்கள் உள்ளன. இங்கு 4,000 பேர் வசிக்கின்றனர்.
பாகீரதி நகர் ஜெ.கே., சாலைக்கும், வேளச்சேரியிலிருந்து மடிப்பாக்கம் செல்லும் பிரதான பஜார் சாலைக்கும் இடையே, அரசுக்கு சொந்தமான, 3,224 சதுர அடி காலி இடத்தை, இருவர் ஆக்கிரமித்துள்ளதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.
ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலம், பள்ளிக்கரணை சர்வே எண்: 663/5சி கீழ் வருகிறது. சற்குணம் என்பவர் வசம் 1,144 சதுர அடியும், முருகா ஹார்டுவேர்ஸ் கடை நிர்வாகம் வசம் 2,080 சதுர அடியும் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு மூன்று கோடி ரூபாய்.
இருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 3,224 சதுர அடி இடத்தை மீட்டு, அதில் இணைப்பு சாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, கலெக்டர், தாசில்தார் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் அளிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு தொடர்பான செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, ஆக்கிரமிப்பாளர்கள் இருவருக்கும், 2020ல் 'நோட்டீஸ்' அனுப்பி, பின் இடத்தை காலி செய்யும்படி, 2022ல் தாசில்தார் உத்தரவிட்டார்.
வருவாய் துறை சார்பில் நில அளவையர், ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் பழைய ஆவணங்களை வைத்து, சமீபத்தில் ஆய்வு செய்தனர்.
அதில், பள்ளிக்கரணை சர்வே எண்: 663/5சி கீழ், அதே பகுதியில் வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என, கூடுதலாக 18,000 சதுர அடி பரப்புள்ள 13 இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு 18 கோடி ரூபாய்.
வருவாய் துறையினர் கூறியதாவது:
பள்ளிக்கரணை சர்வே எண்: 663/5சி கீழ், 3,224 ச.அடி பரப்பு ஆக்கிரமிப்பு இடத்தை மட்டுமே பழைய ஆவணங்கள் வைத்து அளவீடு செய்தோம். ஆனால், அந்த சர்வே எண்ணில், கூடுதலாக 18,000 சதுர அடி பரப்பு அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சர்வே எண்: 664ல், சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடமும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
இது சம்பந்தமான அறிக்கையை, மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்துவிட்டோம். அவரது முடிவுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

