சிதம்பரத்துடன் டி.ஆர்.பாலு சந்திப்பு: தொகுதி குறைப்பு குறித்து பேச்சு?
சிதம்பரத்துடன் டி.ஆர்.பாலு சந்திப்பு: தொகுதி குறைப்பு குறித்து பேச்சு?
ADDED : ஜன 02, 2024 12:33 AM

தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு பேசிய தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் டில்லியில், காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டு குழு கூட்டம், அதன் தலைவர் முகுல் வாஸ்னிக் தலைமையில் நடந்தது. அதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் தலைமையிலான ஐவரணியில் இடம்பெற்றுள்ள, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, செல்வப்பெருந்தகை, எம்.பி.,க்கள் டாக்டர் செல்லக்குமார், மாணிக்தாகூர் பங்கேற்றனர். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சிதம்பரம் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில், தி.மு.க.,விடம் 15 தொகுதிகள் கேட்பதற்கான பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், புதுச்சேரியுடன் சேர்த்து, 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டன.
தற்போது, தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் இடம்பெற பேச்சு நடைபெறுவதாக சொல்லப்படும் சூழலில், காங்கிரஸ் தொகுதிகளை குறைக்க, தி.மு.க., எண்ணுகிறது. அது தொடர்பாக பேசுவதற்காக, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் வீட்டுக்கு நேற்று டி.ஆர்.பாலு சென்றார்.
இருவரும் 40 நிமிடங்கள் பேசியுள்ளனர். காங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலையில் தி.மு.க., இருப்பதாகவும், அந்த தகவலை மேலிடத்தில் எடுத்துச் சொல்லும்படியும், சிதம்பரத்தை பாலு கேட்டுக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

