காங்கிரசுக்கு 125 'சீட்' கேட்கும் மேலிட தலைவர்; தி.மு.க.,வில் கடும் அதிர்ச்சி
காங்கிரசுக்கு 125 'சீட்' கேட்கும் மேலிட தலைவர்; தி.மு.க.,வில் கடும் அதிர்ச்சி
ADDED : செப் 09, 2025 03:54 AM

'தமிழகத்தில், 125 தொகுதிகளில் போட்டியிடுவோம்' என, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசியது, தி.மு.க.,வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'ஓட்டு திருட்டை தடுப்போம்; ஜனநாயகத்தை காப்போம்' என்ற தலைப்பில், காங்கிரஸ் சார்பாக, அக்கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், திருநெல்வேலியில், நேற்று முன்தினம் மாநாடு நடந்தது.
அதில், பங்கேற்ற கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ''வரும் சட்டசபை தேர்தலில், 125 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்'' என பேசினார்.
இதுபோல, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் துணை இல்லாமல், கொம்பனால் மட்டுமல்ல; எந்த கொம்பாதி கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது,” என்றார். இவர்கள் இருவரின் பேச்சு, தி.மு.க., கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் காங்., சார்பில் எடுக்கப்பட்ட, 'சர்வே' அறிக்கையில், 'விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 20 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், காங்.,குக்கு 10 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும்; கூடவே, காங்., போட்டியிடும் இடங்களில் பெரும்பாலான தொகுதிகளை வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
'இவ்விரு கட்சிகளுடன், பிற கட்சிகளும் கூட்டணிக்கு வரும்பட்சத்தில், 40 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும், த.வெ.க., - காங்., கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு உள்ளது' என்றும், 'சர்வே' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை, காங்., மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதன் அடிப்படையில், டில்லி மேலிடம் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்தே, '125 தொகுதிகளில் போட்டியிடுவோம்' என, கிரிஷ் சோடங்கர் பேசியுள்ளார்.
மேலும், 'காங்கிரஸ் இல்லாமல், தி.மு.க.,வால் ஆட்சி அமைக்க முடியாது' என, ராஜேஷ்குமாரும் பேசியுள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
தமிழக காங்., துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “தமிழகத்தில், 125 தொகுதிகளில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அதில் பலம், பலவீனம் கண்டறிந்து, 50 தொகுதிகளை தி.மு.க., கூட்டணியில் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் கிரிஷ் சோடங்கர் பேசினார். அதுபோல், ராஜேஷ்குமார் பேச்சில், எந்த தவறும் இல்லை,” என்றார்.
எம்.பி., - -எம்.எல்.ஏ.,க்கள் 'ஆப்சென்ட்'
திருநெல்வேலி காங்., மாநாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், அகில இந்திய இளைஞர் காங்., செயலர் லெனின் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆனால், தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகையின் எதிர்கோஷ்டிகளான முன்னாள் தலைவர் அழகிரி, அகில இந்திய காங்., செயலர்கள் செல்லக்குமார், விஸ்வநாதன், மயூரா ஜெயக்குமார் பங்கேற்கவில்லை. ஐந்து காங்., எம்.பி.,க்களும், இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் மாநாட்டை புறக்கணித்தனர்.
- நமது நிருபர் -