கீழடி அருங்காட்சியக பொருட்கள் சேதம்; கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படுமா
கீழடி அருங்காட்சியக பொருட்கள் சேதம்; கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படுமா
UPDATED : பிப் 07, 2024 07:45 AM
ADDED : பிப் 07, 2024 05:34 AM

கீழடி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வரலாற்றுத்துறை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அகழாய்வில் எடுக்கப்பட்ட 13 ஆயிரத்து 608 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. பத்து கட்டட தொகுதிகள் கட்டப்பட்டு அதில் ஆறு தொகுதிகளில் விவசாயம், வணிகம், பானைகள், அணிகலன்கள், விளையாட்டு பொருட்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு சிலரின் தவறால் பொருட்கள் சேதமடைந்து வருகின்றன. பொருட்கள் பார்வையாளர்கள் காண வசதியாக கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் கண்ணாடியை தொடாமல் பார்வையிட ஊழியர்கள் வலியுறுத்தினாலும் யாரும் கண்டு கொள்வதில்லை.
கண்ணாடி கூண்டுகளை தட்டி விடுவது, பொருட்களை தடவி பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் பொருட்களும், கண்ணாடி கூண்டும் சேதமடைந்து வருகின்றன.
மாதிரி சுருள் வடிவ குழாய், உறைகிணறு ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொந்தகையில் கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையிலும் சில பொருட்களை பார்வையாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பார்வையாளர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பொருட்களை சேதப்படுத்துபவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். அருங்காட்சியகத்திற்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என வரலாற்றுத்துறை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

