தமிழக அரசுக்கு எதிராக பார்லி.,யில் கேள்வி எழுப்பிய தி.மு.க., - எம்.பி.,
தமிழக அரசுக்கு எதிராக பார்லி.,யில் கேள்வி எழுப்பிய தி.மு.க., - எம்.பி.,
ADDED : ஆக 12, 2024 05:10 AM

'தமிழகத்தில் விவசாயிகள் படும் துன்பங்கள் என்ன; தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை எத்தனை?' என்று கேள்வி கேட்டு, சொந்த கட்சியான தி.மு.க., தரப்பையே அதிர்ச்சியில் ஆழ்த்தப் பார்த்த, கொங்குமண்டல தி.மு.க., - எம்.பி.,யை காப்பாற்றி, அவரை சக மூத்த எம்.பி., கடுமையான டோஸ் விட்ட சம்பவம், பார்லிமென்ட் வட்டாரங்களில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்லிமென்ட் கேள்விகளில், இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ஸ்டார் கேள்விகள். இன்னொன்று ஸ்டார் கேள்விகள். கேள்வி நேரம் நடைபெறும்போது, ஸ்டார் கேள்விகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு, எம்.பி.,க்கள் கேள்வி கேட்க, அதற்கு அமைச்சர்கள் பதில் அளிப்பர்.
அன் ஸ்டார் கேள்விகளுக்கு, நேரடியாக சம்பந்தப்பட்ட எம்.பி.,க்கு பதில்கள் அனுப்பி வைக்கப்படும். கேள்விநேர அலுவல்களின்போது, இவை எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
நடப்புக்கூட்டத் தொடரில், லோக்சபா ஸ்டார் கேள்விகளின் பட்டியலில், ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ், 'தமிழகத்தில் விவசாயிகள் படும் இன்னல்கள், தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை, இவர்களது தற்கொலைக்கான காரணங்கள் என்னென்ன?' என்று கேட்டிருந்தார்.
இந்த கேள்விப் பட்டியல் வெளியான அன்று காலையில், பலருக்கும் ஆச்சரியம். தி.மு.க., மூத்த எம்.பி.,க்களுக்கு இந்தத் தகவல் போனதும், பிரகாஷ் மீது கடும் கோபம் அடைந்தனர்.
தமிழகத்தில் நடப்பதோ நம்முடைய ஆட்சி. அங்கு எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற பட்டியலை, நம் கட்சிக்காரரே கேட்பதா? என்பதுதான் அதிர்ச்சிக்கான காரணம்.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற தகவல் பார்லி.,யிலேயே ஊர்ஜிதமாகி விடுமோ என அச்சப்பட்ட மூத்த எம்.பி.,க்கள் புதிய எம்.பி.,யை வரவழைத்து கடுமையாக திட்டித் தீர்த்தனர்.
புதுமுக எம்.பி.,யான பிரகாஷை நாள் முழுதும் சபை பக்கம் வராமல் பார்த்துக் கொண்டனர். பிரகாஷ், சபைக்கு வராதது தெரிந்த சபாநாயகர் கேள்விக்கான நேரம் வந்ததும், அதை விடுத்து அடுத்த கேள்விக்குப் போய் விட்டார். இதனால் அந்த கேள்வியும், அதற்கான பதிலும் பார்லி.,யில் பேசப்படாமல் அமுங்கிப் போய் விட்டது.
'டிவி'யிலும் நேரடியாக ஒளிபரப்பாகாததால், பிரச்னை வெளியே தெரியாமல் போய்விட்டது. இல்லையென்றால், தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும்.
பார்லி.,யில் ஏன் இப்படி நடக்கிறது என விபரங்கள் அறிந்த எம்.பி., ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் எம்.பி.,க்கள் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களை பி.ஏ.,க்களாக வைத்துக் கொண்டு, பார்லி.,யில் பேச வேண்டியவை குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பர். எழுப்ப வேண்டிய கேள்விகளையும் அவர்கள் வாயிலாகவே தயார் செய்து வாங்கிக் கொள்வர்.
ஆனால் தற்போது, அரசியலை அரைகுறையாகத் தெரிந்த தரகர்கள் வாயிலாக கேள்விகள் தயார் செய்கின்றனர். இதனாலேயே, இதுபோன்ற அபத்தங்கள் நிகழ்கின்றன. கேள்விகள், உரைகள் தயாரிக்க நல்ல விஷய ஞானம் உள்ள உதவியாளரை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, 40,000 ரூபாயை சம்பளமாக, ஒவ்வொரு எம்.பி.,க்கும் அரசே மாதந்தோறும் கொடுக்கிறது.
ஆனால், அப்படி செய்யாமல், பல எம்.பி.,க்கள் பணத்தை அமுக்கி விடுகின்றனர். இதனால்தான் தமிழக எம்.பி.,க்கள் உள்ளிட்ட பல மாநில எம்.பி.,க்களும் பார்லிமென்டில் 'பல்பு' வாங்குவது தொடர்கதையாக நடக்கிறது.
- நமது டில்லி நிருபர் -

