உள்ளாட்சி பிரதிநிதிகளை கண்காணிக்க மா.செ.,களுக்கு தி.மு.க., உத்தரவு
உள்ளாட்சி பிரதிநிதிகளை கண்காணிக்க மா.செ.,களுக்கு தி.மு.க., உத்தரவு
UPDATED : ஏப் 08, 2024 12:12 AM
ADDED : ஏப் 07, 2024 10:53 PM

லோக்சபா தேர்தலில் கட்டாயம் கணிசமான தொகுதிகளையும், பெருவாரியான ஓட்டுகளையும் பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தி.மு.க.,வுக்கு பெரும் நெருக்கடியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கட்சிக்குள் காணப்படும் கோஷ்டிப்பூசல், கருத்து வேறுபாடுகளைக் களைந்து கட்சியினர் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி தேர்தல் பணி செய்ய வேண்டும். மனக்கசப்புகளை மறந்து கூட்டணி கட்சிகளையும் ஒன்றிணைத்து கொண்டு செல்லும் கடமையும் கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் எவ்வளவு தான் பிரசாரம், பேரணி, பொதுக்கூட்டம், என பிரமாண்டம் காட்டினாலும் அடிமட்டத்தில் வாக்காளர்கள் தான் முடிவு செய்து, ஆதரவு அளிப்பதும், எதிர்ப்பு தெரிவிப்பதும் என்று, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றனர்.
நேரடியாக வாக்காளர்களை நீண்ட காலமாகச் சந்தித்து, அவர்களுடன் அன்றாடம் தொடர்பில் உள்ள பிரதிநிதிகளால் மட்டுமே ஓட்டுகளைப் பெற்றுத் தர முடியும் என்பதை திடமாக நம்புகிறது தி.மு.க., மேலிடம்.
இதில் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் தான் முன் நிற்கின்றனர். இவர்களைக் கொண்டு தான் வார்டு வாரியாக ஓட்டுகளைப் பெற முடியும் என்பதால், அவர்களின் தேர்தல் பணிகளை கட்சி தலைமை உன்னிப்பாக கவனிக்கத் துவங்கியுள்ளது.
சட்டசபைக்கு ஆயத்தம்
ஆளும் கட்சி மாவட்ட செயலாளர்களுக்கு, கட்சி தலைமை பிறப்பித்த உத்தரவு: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பெற்ற ஓட்டுகளை இந்த தேர்தலில் நம் கூட்டணி வேட்பாளருக்கு பெற்றுத் தர வேண்டும்.
இது கட்சிக்கு அவர்கள் செய்யும் நன்றிக் கடன்.வார்டுகளில் பெறும் ஓட்டுகள் தான், அடுத்தசட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள உதவும்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இத்தேர்தலில் முழுமையாக பணியாற்றும் வகையில், பகுதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் வழி செய்ய வேண்டும்.
கட்சி தலைவர் உத்தரவுப்படி அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், 100 சதவீதம் முழுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும். இப்பணிகளை மாவட்ட செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

