தேர்தல் களத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம்: விஷம பிரசாரம் முறியடிப்பதில் சிக்கல்
தேர்தல் களத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம்: விஷம பிரசாரம் முறியடிப்பதில் சிக்கல்
UPDATED : ஏப் 08, 2024 12:11 AM
ADDED : ஏப் 07, 2024 10:52 PM

தேர்தல் பிரசாரத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக மேற்கொள்ளப்படும் விஷமத்தன பிரசாரத்தை முறியடிக்க வேண்டிய சூழல், அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் திருவிழா என்றாலே, சுவரொட்டி ஒட்டுவது, வீதி, தெருவெங்கும் அரசியல் கட்சிகளின் கொடி தோரணங்கள் கட்டுவது, என, ஊரே அல்லல்படும். இன்றைய சூழலில், அசாத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள், தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
ஒவ்வொரு கட்சிகளும் 'ஐ.டி., விங்', அமைத்து, அனைத்து சமூக ஊடகங்களின் வாயிலாகவும் பிரசாரம் செய்ய துவங்கியிருக்கின்றன. அதிலும், உலக நாடுகளால் கொண்டாடப்படும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பம், தேர்தலில் முக்கிய பங்காற்றுகிறது.
குரல் நகல்
அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த, 2023 மார்ச், 31ல் ஒட்டு மொத்த உலக நாடுகளின் கவனம் திரும்பிய தினம். அன்று தான், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அந்நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும், வெள்ளை மாளிகையில் கொண்டாடுவது போன்ற ஒரு வீடியோ வைரலானது.
அது, ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்பது, பின் தெரியவந்தது. இந்த போலி வீடியோ, அந்நாட்டின் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டது; லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்தது.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில், ஒருவரின் குரலை அப்படியே நகலெடுக்க முடியும்; அதை வைத்து, அந்த நபர் பேசுவது போன்று, எதை வேண்டுமானலும் பேசச் செய்ய முடியும்.
அதே போன்று, வாக்காளர்களின் சுய விவரங்களை அறிந்து, ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உதவியுடன், அவர்களின் தேவையை வேட்பாளர்கள் பூர்த்தி செய்து கொடுக்கவில்லை என அவர்களே கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட முடியும்.
விழிப்புணர்வு தேவை
தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை பரப்புவது; வாக்காளர்களுக்கு தவறான தகவல்களை தருவது போன்றவை நிச்சயம் நடக்கும்; இது, ஜனநாயக ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும். செயற்கை நுண்ணறிவு உதவியால் தேர்தல் முடிவுகளை மாற்றிவிடலாம் என நினைப்பது, ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. ஏராளமான நன்மைகளை உள்ளடக்கிய ஏ.ஐ., தொழில்நுட்பம், தீய வழியில் பயன்படுத்தப்படுவதை கண்டறிந்து தடுப்பது கடினம்; இதுகுறித்த விழிப்புணர்வை வாக்காளர்கள் தான் பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

