5 மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டம் அடுத்த மாதம் துவங்குகிறது
5 மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டம் அடுத்த மாதம் துவங்குகிறது
ADDED : மே 22, 2024 01:59 AM

ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற, தமிழக அரசு அறிவித்துள்ள, 'முதல்வரின் தாயுமானவர்' திட்டம் அடுத்த மாதம் துவங்க உள்ளது.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, பல சமூக நல திட்டங்களால், வறுமையை குறைப்பதில், தமிழகம் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்துஉள்ளது.
அதை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின், 'நிடி ஆயோக்' சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் சதவீதம், மிகக்குறைவாக 2.2 சதவீதம் மட்டுமே' என்று குறிப்பிட்டுள்ளது.
எனினும், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 'முதல்வரின் தாயுமானவர் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில், மிகவும் வறிய நிலையில் உள்ள, 5 லட்சம் ஏழை குடும்பத்தினருக்கு, அரசு உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும், இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படுவர்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் வழியாக, மாநிலம் முழுதும் மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பங்கள் கண்டறியப்பட உள்ளன.
இத்திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பு உறுதி செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை முதலில் சோதனை அடிப்படையில், ஐந்து மாவட்டங்களை தேர்வு செய்து செயல் படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில், ஏழை குடும்பங்களை எந்த அடிப்படையில், எவ்வாறு கண்ட றிய வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு, இன்று பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளன. முதலில் சோதனை அடிப்படையில், ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டங்கள் என்ற விபரமும், திட்ட செயல்பாடு குறித்த விபரங்களும், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் வெளியிடப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
- நமது நிருபர் -

