UPDATED : செப் 20, 2025 12:00 AM
ADDED : செப் 20, 2025 08:47 AM

சென்னை:
'ஆன்லைன்' பட்டப்படிப்புகளில் சேரும் முன் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை, மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்' என, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி. செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிக்கை:
உயர் கல்வி நிறுவனங்களில், ஆன்லைன், தொலை துார மற்றும் திறந்தநிலை கல்வி மாணவர் சேர்க்கை, அக்., 15 வரை நடக்கும். இதன் வழியே படிக்க விரும்பும் மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை, https://deb.ugc.ac.in இணையதளத்தில் காணலாம்.
தமிழகத்தை சேர்ந்த, சேலம் பெரியார் பல்கலை, சுரேஷ் கியான் விஹார் பல் கலைக்கு, 2024 - 25, 2025 - 26ம் கல்விஆண்டு, ஆன்லைன் கல்வி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும், இத்தகைய படிப்புகளில் சேரும் முன், கல்லுாரிகளுக்கான அங்கீகார அனுமதியை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல், இன்ஜினியரிங், மருத்துவம், இயன்முறை சிகிச்சை, பல் மருத்துவம், கட்டடக்கலை உட்பட ஏராளமான படிப்புகள் ஆன்லைன் மற்றும் தொலை துாரக் கல்வி வழியே கற்பிக்க தடை உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.