2026 ஜனவரியில் திருக்குறள் மாநாடு; திருவள்ளுவர் சங்க தலைவர் தகவல்
2026 ஜனவரியில் திருக்குறள் மாநாடு; திருவள்ளுவர் சங்க தலைவர் தகவல்
UPDATED : செப் 15, 2025 12:00 AM
ADDED : செப் 15, 2025 11:16 AM
பெங்களூரு:
''அடுத்தாண்டு ஜனவரியில் பெங்களூரில் திருக்குறள் மாநாடு நடத்தப்படும்,'' என, பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டு புலம், மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், திருக்குறள் உயராய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் திருவள்ளுவர் இருக்கை இணைந்து பன்னாட்டு திருக்குறள் அமைப்புகளின் இணையம் - 35வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார், காணொளிக்காட்சி மூலம் பேசியதாவது:
பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், 65 ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். 1960ல் பெங்களூரு சட்டக்கல்லுாரி பேராசிரியர் ஆ.ம.தர்மலிங்கம் துவக்கியது. 1980ல் சட்ட திட்டங்களை உருவாக்கி, உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்தினர்.
பொதுக்குழு வாயிலாக, செயற்குழுவுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து, தலைவர், துணைத்தலைவர் என நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வையார், வள்ளலார், காமராஜர், அப்துல்கலாம் என 15 அறக்கட்டளைகள் உள்ளன. இந்த சங்கத்தில் இருந்த பலர், திருக்குறளுக்கு பெருமை சேர்த்தனர்.
அடுத்தாண்டு ஜனவரியில் திருவள்ளுவர் தினத்தன்று, பெங்களூரில் திருக்குறள் மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதில் பங்கேற்க வெளிநாடுகளில் உள்ள திருவள்ளுவர் சங்கங்கள், அமைப்புகளை அழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் உட்பட பிற மாநிலங்களை சேர்ந்த 34க்கும் மேற்பட்ட திருக்குறள் அமைப்புகள், காணொளிக்காட்சி மூலம் இணைந்துள்ளன.